மூத்த உறுப்பினரும் – தளபதியுமான “கப்டன் பண்டிதர் (இளங்கோ)” உட்பட ஆறு மாவீரர்களின் 41’ம் ஆண்டு வீரவணக்க நாள்.

09-01-2026 | யாழ்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான கப்டன் பண்டிதர் 1985ம் ஆண்டு  ஜனவரி 9ம் திகதி அச்சுவேலியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றை சிங்களப்படைகள் முற்றுகையிட்ட பொது இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்தார்.

பண்டிதர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். அதுமாத்திரமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் பராமரிப்புக்கும் நிதிவளங்களுக்கும் பொறுப்பாளராக இருந்தார். வல்வெட்டித்துறைக்கு அருகேயுள்ள கம்பர்மலையை பிறப்பிடமாக கொண்டவர். அவர் வீரச்சாவடைகின்ற போது வயது இருபத்தி நான்கேயாகும்.

1977ம் ஆண்டு அமைப்பில் இணைந்து விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். கடமையுணர்வு, கடும் உழைப்பு, இலட்சியப் பற்று ஆகிய சீரிய பண்புகள் நிறைந்த கப்டன் பண்டிதர் சகபோராளிகளின் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமாக விளங்கினார். தமிழீழத் தேசியத் தலைவரின் நேசமிக்க தளபதியாக விளங்கிய பண்டிதர் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்புக்களை சுமந்ததொடு மட்டுமல்லாது பல வெற்றிகரமான தாக்குதல்களிலும் கலந்துகொண்டார்.

தமிழீழ விடுதலைகாய் இன்னுயிரை நீத்த இவ் வீரமறவனின் நினைவோடு எம் பணி தொடர்வோம்.



Leave a Reply