இலங்கையில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச பொறுப்புக்கூறலும் முழு ஆதரவும் அவசியம்.

இலங்கை

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமான சர்வதேச பொறுப்புக்கூறல் அமைப்புகள், முழுமையான இழப்பீட்டு திட்டங்கள், நீடித்த மனநல ஆதரவு ஆகியவை அவசியம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி, இழப்பீடு மற்றும் பொறுப்புக்கூறல் என்பன தொடர்பான ஆய்வின் முடிவுகளை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் நேற்று (15) வெளியிட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிர்தப்பிய தமிழர்களுடன் இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட கலந்தாய்வுகளின் முடிவுகளே இந்த அறிக்கையாகும்.

இந்த அறிக்கை, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு ஆய்வு செய்கிறது.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட போதும், அதற்குப் பிறகும் இலங்கை பாதுகாப்புப் படையினரால் பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நிகழ்த தப பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் எனப் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த ஆய்வை நடத்துவது பாதுகாப்பு காரணங்களால் சாத்தியமில்லாததால், இந்த ஆய்வு லண்டனில் மேற்கொள்ளப்பட்டது.

68 பக்கங்களைக் கொண்ட “Opening a Conversation: The Justice and Reparations Needs of Exiled Tamil Survivors of Conflict-related Sexual Violence”

என்ற இந்த அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களால் வரையப்பட்ட ஓவியங்களும், அவர்களின் சாட்சியங்களிலிருந்து சில மேற்கோள்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களில் பலர், போர் முடிந்த பிறகு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்தவர்கள்.

“மகிழ்ச்சியான வாழ்க்கை, பாதுகாப்பான சூழல், ஆரோக்கியமான மனநிலை, தரமான கல்வியைப் பெறும் வாய்ப்பு” என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது.

பாலியல் வன்முறைகள் தனிநபர்களுக்கு மட்டுமல்ல, முழு தமிழ் சமூகத்திற்கும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

“அதன் தாக்கம் உணர்வை மயக்கச் செய்துவிட்டது,” என ஒருவர் கூறினார்.

“அவமானத்தின் சின்னமாக நாங்கள் பார்க்கப்படுகிறோம்,” என இன்னொருவர் தெரிவித்தார்.

இலங்கையில் இருந்தபோதும், அல்லது வெளிநாட்டில் அகதியாக வாழ்ந்தபோதும், பயம், அவமானம், தனிமை ஆகியவை தங்கள் வாழ்க்கையை ஆட்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். பாதுகாப்புப் படைகளுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள், கனவுக்கொடுமைகள், திடீர் நினைவுகள் ஆகியவை அவர்களை குடும்பத்திலும் சமூகத்திலும் இருந்து விலகச் செய்துள்ளன.

பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடி வருகின்றனர்.

“பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு தற்கொலை எண்ணங்களைத் தவிர வேறு வழி தெரியவில்லை,” என ஒருவர் கூறினார்.

தன் உடலில் உள்ள காயங்களைப் பற்றி குழந்தை கேட்டபோது என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை என ஒரு தந்தை வேதனையுடன் பகிர்ந்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் முதலில் அரசால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் தங்களது சொந்த சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

“இது எங்கள் குடும்பத்திற்கே பிரச்சினையை உருவாக்குகிறது. எங்கள் சொந்த குடும்பமே எங்களை ஒதுக்குகிறது. சமூகமும் அதையே செய்கிறது.”

ஆண்களும் பெண்களும் ஒன்றாக கலந்து கொண்ட இந்த குழு, வாரந்தோறும் லண்டனில் சந்தித்து மனநல ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இலங்கையிலும் பிரிட்டனிலும் மருத்துவ மற்றும் மனநல சேவைகளைப் பெறுவதில் பல சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

பாலியல் வன்முறையிலிருந்து உயிர்தப்பிய ஆண்களும் பெண்களும் தங்கள் அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்தது இதுவே முதல் முறையாகும்.

“இந்த கலந்தாய்வில் கலந்து கொண்ட பிறகு, பாலியல் வன்முறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தேன். இது மிக முக்கியமான உண்மை,” என ஒருவர் கூறினார்.

இதுவரை பேசப்படாத இந்த விடயங்களைப் பகிர்வதற்கு ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும், பாதுகாப்பான சூழல் இருப்பதை உணர்ந்த பிறகு அனைவரும் ஒன்றாக இணைந்து பேசத் தொடங்கினர்.

“பாதிக்கப்பட்ட பிறகு கண்ணாடி முன் நின்று நம்மையே பார்க்க முடியவில்லை. ஆனால் இப்போது பார்க்க முடிகிறது. இது ஒரு பெரிய சாதனை,” என ஒரு பெண் கூறினார்.

பாலியல் வன்முறைகள் மட்டுமன்றி, கடத்தல்கள், சித்திரவதை, அடிதடிகள், மருத்துவ உதவி மறுப்பு, இடம்பெயர்வு, குடும்ப அழிவு போன்ற பல்வேறு கொடுமைகளையும் அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இந்த வன்முறைகள் தமிழர்களின் தனித்துவம், கலாச்சாரம், மனநிலை ஆகியவற்றை அழிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

“பெண்களின் உடல்களை ஆயுதமாகப் பயன்படுத்தியதன் விளைவாக சமூகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டது,” என அவர்கள் கூறினர்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.

“அவ்வாறு நடந்தால் அது எங்களுக்கு ஒரு சிறிய மனநிம்மதியையாவது தரும்.”

போர் முடிந்த பிறகும், இலங்கை பாதுகாப்புப் படையினரால் கடத்தல்கள், சித்திரவதை, பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சர்வதேச அமைப்புகள் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால் இலங்கை அரசு இவற்றை மறுத்துவருகிறது.

இந்த மறுப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் மனவலியை ஏற்படுத்தியுள்ளது.

“எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போரில் இறந்துவிட்டனர். ஆனால் இலங்கை அரசை பொறுப்பேற்கச் செய்ய உலக சமூகம் எதையும் செய்யவில்லை,” என ஒருவர் வேதனையுடன் கூறினார்.

நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாததால், அவர்கள் அனுபவித்த குற்றங்கள் மீண்டும் மீண்டும் பேசப்படாத காயங்களாக மாறியுள்ளன.

இந்த ஆய்வு, பாதிக்கப்பட்டவர்களின் மனநலம், மரியாதை, இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நீதியும் பொறுப்புக்கூறலும் அத்தியாவசியம் என்பதை வலியுறுத்துகிறது.

இலங்கையில் நடைபெறும் மீறல்களை முடிவுக்குக் கொண்டு வரவும், தண்டனை இல்லா சூழலை நிறுத்தவும், பாதிக்கப்பட்ட உயிர்தப்பியவர்களின் குரல்களை வலுப்படுத்தவும், ஐக்கிய நாடுகள் சபை, அதன் உறுப்புநாடுகள் மற்றும் நன்கொடையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அழைப்பு விடுக்கிறது.

Leave a Reply