இலங்கையின் நிட்டம்புவாவில் 61 கிலோ ஐஸ் போதைப் பொருளுடன் பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய ஒருவர் கைது.
கம்பஹா,
வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள பாதாள உலகக்குகுழுவைச் சேர்ந்த பாரியளவான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
கம்பஹா, நிட்டம்புவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட பாரிய சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 61 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னகொல்லவத்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை (20-01-2026) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மேல் மாகாண (வடக்கு) விசேட நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது, முச்சக்கர வண்டியோன்றில் கடத்தி செல்லப்பட்ட 61 கிலோகிராம் 836 கிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பின்னகொல்லவத்தை, நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளுக்கமைய சந்தேகநபர்கள், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்ற கும்பல்கள் மற்றும் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த பாரிய கடத்தலின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.