2025 ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கை மூன்றாவது இடத்தை வென்றது.
இலங்கை
சர்வதேச அளவில் திருமணமான பெண்களுக்காக நடத்தப்படும் மிக உயரிய அழகு ராணி போட்டியான ‘மிசஸ் வேர்ல்ட் 2025’ இறுதிப் போட்டி அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் நடைபெற்றது.

அதில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் அழகு ராணிகள் பங்கேற்ற நிலையில், இலங்கையைச் சேர்ந்த திருமதி அழகு ராணி சபினா யூசுப் மூன்றாவது இடத்தைப் பிடித்து (2nd Runner-up) இலங்கைக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
ஜனவரி மாதம் 22 முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், சபினா தனது சிறப்பான ஆளுமை மற்றும் திறமையால் நடுவர்களைக் கவர்ந்தார்.
இந்தப் போட்டியில் தாய்லாந்து அழகு ராணி சானிதா சீடகெட் க்ரேதோர்ன் முதலிடத்தைப் பிடித்து மகுடம் சூடினார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பைஜ் எவிங் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் கொழும்பில் நடைபெற்ற ‘திருமதி இலங்கை உலக அழகு ராணி’ போட்டியில் வெற்றி பெற்ற சபினா, உலக மேடையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றார்.
திருமதி உலக அழகு ராணி போட்டியில் இலங்கைக்கு நீண்ட கால வரலாறு உண்டு.
1984-ல் ரோஸி சேனநாயக்க முதன்முதலாக மகுடம் சூடினார்.
2020-ல் கரோலின் ஜூரி உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
2024-ல் இஷாதி அமண்டா இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
தற்போது சபினா யூசுப் இந்தப் பட்டியலில் இணைந்து, சர்வதேச அழகிப் போட்டிகளில் இலங்கையின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளார்.
சபினா தனது 16 வயதிலேயே ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ‘மிஸ் ஸ்ரீலங்கா 2016’ பட்டத்தை வென்றவர். திருமணத்திற்குப் பின்னர் பெண்களின் கனவுகள் முடிந்துவிடுவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் மீண்டும் இந்தப் போட்டியில் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார்.