மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்: உயர் நீதிமன்றம்
சென்னை
‘கோவை மாவட்டம் மருதமலையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து, 500 மீட்டர் சுற்றளவுக்குள் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித்தடமான மருதமலை, சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான பகுதி. நீலகிரி வனப்பகுதியில் இருந்து, பிற வனப்பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.
இந்த பகுதியில், 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து, சென்னை கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சிலை அமைய உள்ள சரியான இடம்; ‘பார்க்கிங்’ போன்ற அடிப்படை வசதிகள் போன்றவை குறித்த முழு விபரங்களுடன் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதேபோல, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் நீதிமன்றத்துக்கு உதவும் மூத்த வழக்கறிஞர்கள் குழுவும், சிலை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்தது.
இவற்றை படித்த பின், நீதிபதிகள் கூறியதாவது: வன விலங்குகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், முருகன் சிலை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கோவை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சிலை அமைக்க புதிதாக பரிந்துரைத்த இடம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தான் வருகிறது. இங்கு முருகன் சிலை நிறுவப்பட்டால், அதை பார்வையிட லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.
இந்த எண்ணிக்கை நாளடைவில் பன்மடங்கு அதிகரிக்கும். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும், முருகனை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் வருவர். இது, சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், 500 மீட்டர் சுற்றளவில் எந்தவித கட்டுமானங்களையும் அனுமதிக்கக்கூடாது. – இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ”நிறுவப்படும் முருகன் சிலைக்கு பூஜைகள் ஏதும் நடத்தப்படாது. சிலையை வலம் வந்து தரிசிக்க மட்டுமே அனுமதி வழங்கப்படும். 437 மீட்டருக்கு அப்பால் ஒரு இடம் உள்ளது. அந்த இடத்தில் சிலையை அமைக்க அனுமதிக்க வேண்டும். வனத்துறை வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். அதில் எந்தவிதமான விலகலும் இருக்காது,” என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து, 500 மீட்டருக்கு அப்பால் மாற்று இடத்தை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்; விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.