காத்தான்குடியில் இளம் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி – 01 பிப்ரவரி 2026

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து, மூன்று மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (30-01-2026) உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவரும், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சட்டத்தரணியாக கடமையாற்றி வருபவருமான ஒருவர், தனது பிரதேசத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த, நான்கு பெண் பிள்ளைகளை கொண்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரியான 24 வயதுடைய யுவதி ஒருவரை 2023 ஆம் ஆண்டு முதல் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

அந்த யுவதி காலை முதல் இரவு 8.30 மணி வரை, 2025 ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டு வருடங்களாக கடமையாற்றி வந்துள்ளார். அவருக்கு வாரத்திற்கு 3,000 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், அலுவலகத்தில் தனியாக பணியாற்றிக் கொண்டிருந்த யுவதிக்கு, குறித்த சட்டத்தரணி மதிய உணவு பொட்டலமொன்றை வழங்கி உணவுகொள்ளுமாறு கூறியுள்ளார். அதை உணவாக எடுத்த சில நிமிடங்களில் யுவதி மயக்க நிலைக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யுவதியின் சம்மதம் இன்றி, சட்டத்தரணி அலுவலகத்திற்குள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின்னர், யுவதி இதுகுறித்து தனது குடும்பத்தினருக்கும் எவருக்கும் தெரிவிக்காமல் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த சட்டத்தரணி 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி யுவதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் பேசிச் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் ஒரு வாரத்திற்குள் யுவதி வாந்தி மற்றும் மயக்க நிலை காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் 12 வாரங்கள் கொண்ட, மூன்று மாத கர்ப்பிணி என உறுதிப்படுத்தியுள்ளனர்.

திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருந்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து, கணவர் யுவதியுடன் முரண்பட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து, யுவதி மீது பாலியல் வன்கொடுமை இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் மற்றும் பெண்கள் அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், பிரதேச செயலக சேவையில் இயங்கும் மகளிர் பிரிவினர் யுவதியை பாதுகாப்பான இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்கவைத்துள்ளனர். இதுகுறித்து அமைச்சு பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, யுவதியிடமிருந்து வாக்குமூலம் பெற பொலிசார் பாதுகாப்பு இல்லத்திற்கு சென்றபோது, ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்படாமல் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை (28) யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பொலிசார் வியாழக்கிழமை (29) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சட்டத்தரணிக்கு எதிராக பலாத்கார கற்பழிப்பு குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டு, அடுத்த வழக்கை 26ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், குறித்த சட்டத்தரணி வெள்ளிக்கிழமை (30) கைது செய்யப்பட்டு, மாலை 5.00 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். எதிராளி சார்பில் சட்டத்தரணி எம்.ஐ. இயாஸ்டீன் தலைமையில் நான்கு சட்டத்தரணிகளும், வழக்காளி சார்பில் சட்டத்தரணி றிஸ்வி தலைமையில் யோகேஸ்வரன், கமலதாசன், வேணுதாசன், நஜீபா, ரம்சீயா உள்ளிட்ட சட்டத்தரணிகளும் ஆஜராகினர்.

இரவு 7.30 மணி வரை நீண்ட விசாரணையின் பின்னர், நீதவான் குறித்த சட்டத்தரணியை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனிடையே, எதிராளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஐ. இயாஸ்டீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இருவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், இலங்கை சட்டத்தின் படி சம்மதம் இருந்தால் குற்றமாகாது எனவும் தெரிவித்தார். எனினும், முறைப்பாட்டாளர் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதாக கூறினார்.

16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் கட்டாய விளக்கமறியல் மற்றும் சிறைத்தண்டனை அவசியம் என்றும், இவ்வழக்கில் 16 வயதுக்கு மேற்பட்டவர் மூன்று மாதங்கள் கழித்து முறைப்பாடு செய்துள்ளதால் மேலதிக விசாரணைகள் அவசியம் என்பதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதால், நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply