தமிழக குவாரி வாகனங்களின் விதிமீறல் குறித்து உயர் நீதிமன்றத்தில் தகவல்

மதுரை, தமிழ்நாடு, 01 பிப்ரவரி 2026

 திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே கிராம சாலைகள் வழியாக குவாரி பொருட்களை கனரக வாகனங்களில் கொண்டு செல்ல தடை கோரிய வழக்கில், சட்டத்தை மீறியதற்காக 49 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.

ராதாபுரம் அருகே ராஜகிருஷ்ணாபுரம் ராஜகோபால் தாக்கல் செய்த மனு:

ராஜகிருஷ்ணாபுரம், மடம்பிள்ளைதர்மம் கிராமங்களின் குறுகிய சாலைகள் வழியாக கற்கள், எம்-சாண்ட், இதர குவாரி பொருட்களை கனரக வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். இதை தடுக்க வேண்டும். திருநெல்வேலி- நாகர்கோவில் மாநில நெடுஞ்சாலையையும், நான்குவழிச் சாலையையும் மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்ய வலியுறுத்தி கலெக்டர், ஆர்.டி.ஓ.,ராதாபுரம் தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். – பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் ஆஜரானார்.

அரசு கூடுதல் வழக்கறிஞர் அசோக்: ராதாபுரம் பகுதியில் 38 உரிமம் பெற்ற குவாரிகளில், 31 குவாரிகள் செயல்படுகின்றன. சட்டவிரோத குவாரிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கை: கனிமவள சட்டத்தை மீறியதற்காக 49 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அனுமதியற்ற குவாரி மற்றும் வாகன போக்குவரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆர்.டி.ஓ.,தாக்கல் செய்த அறிக்கை: சட்டவிரோத குவாரிகள் மற்றும் கனிமவளங்களை கடத்தும் நபர்களுக்கு எதிராக ராதாபுரம் தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கனிம குவாரி தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கனரக வாகனங்கள் இச்சாலை வழியாக செல்லக்கூடாது என குறிப்பிட்டு தெருவில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது அத்தகைய வாகனங்கள் அச்சாலை வழியாக செல்வதில்லை. இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

குவாரி நடவடிக்கைகள், அதற்குரிய வாகன போக்குவரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஏதேனும் விதிமீறல் நடந்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், தீர்வு காண மனுதாரர் இந்நீதிமன்றத்தை அணுக உரிமை உண்டு. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

குவாரி நடவடிக்கைகள் அதற்குரிய வாகன போக்குவரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

Leave a Reply