சென்னை – புதுச்சேரி – கடலூர் வரை 179 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை
சென்னை
சென்னையில் இருந்து கடலோரமாக ரயில் பாதை அமைத்தால், போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே, சென்னை — புதுச்சேரி — கடலுார் வரை, 179 கி.மீ., துாரத்திற்கு, புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு 2007ம் ஆண்டு, ரயில்வே ஒப்புதல் அளித்தது. இதற்கான ஆரம்ப கட்ட சர்வே பணிகள் நடந்தன. அதன்பின், எந்த பணியும் நடக்காமல் திட்டம் முடங்கியது.

இதுபோல், திண்டிவனம் – திருவண்ணாமலை 70 கி.மீ., புதிய பாதை திட்டம், 2007ல் அறிவிக்கப்பட்டது. ஆவடி – ஸ்ரீபெரும்புதுார் – கூடுவாஞ்சேரி 58 கி.மீ., புதிய ரயில் பாதை திட்டம், 2013ல் அறிவிக்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நின்று போனது. இம்மூன்று திட்டங்களும், பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கின்றன. தற்போது இத்திட்டங்களை செயல்படுத்த, ரயில்வே முடிவு செய்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வேயின், தலைமை நிர்வாக அதிகாரி சுஷில் குமார் மவுரியா கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மூன்று புதிய ரயில் பாதை திட்டங்களை மீண்டும் துவக்கி, பணிகளை விரைவுபடுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. எனவே, சென்னை — புதுச்சேரி – கடலுார்; திண்டிவனம் — திருவண்ணாமலை; ஆவடி – ஸ்ரீபெரும்புதுார் — கூடுவாஞ்சேரி; ஆகிய மூன்று ரயில் பாதை திட்டங்களும், இனி வேகமெடுக்கும்.
ஆவடி- – கூடுவாஞ்சேரி – ஸ்ரீபெரும்புதுார் திட்டத்தில், முதல் கட்டமாக ஸ்ரீபெரும்புதுார் – இருங்காட்டுக்கோட்டை மற்றும் கூடுவாஞ்சேரி இடையிலான, 32 கி.மீ., துாரம் பகுதி மட்டும் எடுத்து, பணிகளை விரைவுபடுத்த உள்ளோம். – இவ்வாறு அவர் கூறினார்.