சமூக ஊடகங்களைப் பார்த்து பெட்ரோல் குண்டுகள் தயாரித்து தாக்குதல் நடத்திய மதுரை பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, தமிழ்நாடு – 05 பிப்ரவரி 2026
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில், ஜன., 25 இரவில், மூன்று இடங்களில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக நான்கு சிறார்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பிப்., 2 இரவு ஜீவா நகரில் ஒரு வீட்டருகே பெட்ரோல் குண்டு வீசியதோடு, அப்பகுதி டூ – வீலர்களை போதையில் சேதப்படுத்தியதாக பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஐந்து பேர், படிப்பை பாதியில் நிறுத்திய 16 வயது சிறார்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
போலீசார் கூறியதாவது: ஒரு பள்ளி மாணவனின் தாய்க்கும், ஜீவா நகரைச் சேர்ந்த 60 வயது நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு குடும்பத்திலும் பிரச்னை ஏற்பட்டது. அந்த நபரை மாணவரும், அவரது நண்பரும் தாக்கியதாக கைது செய்யப்பட்டனர்.
இதனால் ஆத்திரமுற்ற சக மாணவர்கள் உட்பட ஏழு பேர், புகார் கொடுத்த நபரை மிரட்டுவதற்காக டூ – வீலரில் இருந்து பெட்ரோலை திருடி, குவார்ட்டர் பாட்டிலில் ஊற்றி, பற்ற வைத்து வீட்டின் மீது வீசியுள்ளனர்.
கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு அடிப்படையில் மாணவர்களையும், இரு சிறார்களையும் கைது செய்தோம். சமூகவலைதளங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வீடியோக்களை பார்த்து தாங்களும் வீச முடிவு செய்ததாகவும், எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டதாகவும் கைதான சிறார்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவ்வாறு கூறினர்.