1990 காலப்பகுதிகளில் மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை சிறுவர்கள் பெண்கள் பாரபட்சமின்றி விசாரணை என்ற பெயரில் அழைத்து சித்திரவதைக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், குறித்த பிரதேசத்தில் அக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாம் அமைந்த பகுதி அகழ்வு செய்யப்பட்டு இச்சம்பவம் தொடர்பான உறுதிப்படுத்தலை மேற்கொண்டு உரியவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரி சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் செவ்வாய்க்கிழமை (09) கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சந்துருக்கொண்டான் படுகொலை இடம்பெற்று 35 வருடங்கள் கடந்த நிலையில் இது தொடர்பிலான நீதியான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், யாழ். செம்மணி போன்று வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றுள்ளமையும் அது தொடர்பான எச்சங்கள் மீட்கப்படுகின்ற விடயங்களையும் கருத்திற் கொண்டு குறித்த முறைப்பாடு இக்குழுவினரால் முன்னெடுக்கப்படுகின்றது.
கோரி சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல்,மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களான தயாள கௌரி,ரகுநாதன் மற்றும் சிவில் செயற்பாட்டாளர் லவகுகராசா ஆகியோர் சட்டத்தரணிகளான கமல்ராஜ், தவராஜா ஆகியோருடன் இன்றைய தினம் காலை கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் குறித்த முறைப்பாட்டினை மேற்கொண்டார்.
இதற்கு முன்பாக மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலையத்திற்கு சென்று இது தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கு நடவடிக்கையெடுத்தபோது தலைமையக பொலிஸாரினால் சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரை சந்திக்குமாறு அறிவுறுத்தல்க்ள வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரை சந்திததன் பின்னர் குழுவினரால் படுகொலை நடைபெற்ற பிரதேசத்திற்குரிய பொலிஸ் நிலையமாகவுள்ள கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இராணுவத்தினராலும், ஊர்காவல் படையினராலும், ஒட்டுக்குழுவினராலும் இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது. இந்தப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.
தமக்கான நீதி இந்த நாட்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லையெனவும் தமக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் இதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதி வழங்கவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
எவ்வாறாயினும் இராணுவமுகாம் இருந்த பகுதி அகழ்வு செய்யப்படவேண்டும் என்பதற்காக இந்த முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
இன்று பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான், பனிச்சையடி மற்றும் கொக்குவில் ஆகிய கிராமங்களில் இலங்கை இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் படுகொலை செய்யப்பட்டு 35 வது ஆண்டு நிறைவு.
இன்று நாங்கள் இந்த படுகொலைக்கான நீதியை மீண்டும் எதிர்பார்த்துக் கொண்டு இன்று சத்துருக்கொண்டான் ராணுவ முகாம் அமைந்த இடத்தை அகழ்வு பணி மேற்கொள்ள வேண்டும் என்று இன்று நாங்கள் மட்டக்களப்பு கொக்குவில் போலீஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாட்டை செய்துள்ளோம். இந்த முறைப்பாட்டை கொக்குவில் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்.
எனவே இதற்கான நீதி அரசாங்கத்தின் உள்ளக விசாரணையில் நிதிவித நம்பிக்கையும் இல்லை எனவே இந்த விசாரணை ஒரு சர்வதேச பொறிமுறைக்கு சென்று விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதனை எதிர்பார்க்கின்றோம். இருப்பினும் இன்று இந்த நீதிக்காக நாங்கள் முறைப்பாட்டை செய்திருக்கின்றோம். இதற்கான நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.