சென்னை – ஜோலார்பேட்டை தடத்தில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள்

சென்னை

சென்னை – ஜோலார்பேட்டை தடத்தில், மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுதும் விரைவு ரயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகள், சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை தடத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

ரயில்வே விதிப்படி, ‘குரூப் ஏ’ வழித்தடத்தில், அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில், சென்ட்ரல் – அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்துக்கு முன்னுரிமை அளித்து, பணிகள் நடந்து வருகின்றன.

அதிக வளைவுகளை நீக்குவது, ரயில் பாதையை மேம்படுத்துவது, மிகவும் பழமையான ரயில்வே பாலங்களை நீக்குவது, ‘சிக்னல்’ தொழில்நுட்பம் மேம்படுத்துதல், தேவையான இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம்.

தற்போது, 50 சதவீத பணிகளை முடித்துள்ளோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் எஞ்சியுள்ள பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். – இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *