நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

காத்மாண்டு

நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கடந்த 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையில் முடிந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரித்தது.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் காத்மாண்டுவில் உள்ள பார்லிமென்ட், தலைமை செயலகம், உச்சநீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் இல்லங்களை சூறையாடினார். நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதன் பின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்ததால், அடுத்து தேர்தல் நடக்கும்வரை அரசை வழிநடத்த இடைக்கால பிரதமரை தேர்வு செய்யும் பணி நடந்தது. காத்மாண்டு மேயர் பாலென் ஷா, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி குல்மான் கிஷிங் ஆகியோரை போராட்டக் குழுவினர் பரிந்துரைத்தனர்.

இதில், பாலென் ஷா தனக்கு விருப்பம் இல்லை என அறிவித்து விட்டார். சுசீலா கார்கி, மற்றும் குல்மான் கிஷிங் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்வதில் மாணவர்கள் அமைப்பினர் இடையே குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், இந்த குழப்பத்துக்கு இன்று முடிவு ஏற்பட்டது. இடைக்கால அரசின் பிரதமராக சுசீலா கார்கி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று இரவு பதவியேற்பார் என தெரிகிறது. இதனையடுத்து நேபாளத்தின் பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *