தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தவறினால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’ என, எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக, 41க்கும் அதிகமான கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் ராஜேந்திரன் முன் வைத்த வாதங்கள்:
சிலை கடத்தல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் மாயமானதாக அரசு தரப்பில் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் அவை திருடப்பட்டுள்ளன.
38 போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து, 41 ஆவணங்கள் திருடப்பட்டு இருப்பது சாதாரண விஷயம் அல்ல.
இதில் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். ஏனென்றால். ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களின் பொறுப்பு அதிகாரிகள் மீது இதுவரை எந்த வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
மேலும் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சிலைகள் குறித்த விபரங்களும் கிடைக்கப் பெறாமலேயே உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் தொடர்பான விஷயங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.இவ்வாறு அவர் வாதிட்டார்.
சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் எப்படி தொலைந்தன; அதற்கான காரணம் என்ன? 375க்கும் அதிகமான சிலைகள் திருடப்பட்டு இருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன. அவை அனைத்தும் வெளிநாட்டில் உள்ள காப்பங்களில் வைக்கப்பட்டு இருக்கிறதா? அதை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? பதிவு செய்யப்பட்டிருந்தால், வழக்கு எந்த நிலையில் உள்ளது? இதற்கான விளக்கங்களை தமிழக அரசு தெரிவிக்கவில்லை என்றால், தலைமைச் செயலர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நேரிடும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை நவ., 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.