யாழ்ப்பாணம் பண்ணைச் சுற்றுவட்டாரப் பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீதிக்கு மிக அருகாமையில் தொல்லியல் திணைக்களத்தால் எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் செவ்வாய்க்கிழமை (16.09.2025) ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

இதன்போது, தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பந்துல் ஜீவ சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டு, தொல்லியல் திணைக்களத்தால் அமைக்கப்பட்டுள்ள 48 எல்லைக் கற்களாலும் வீதி விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த எல்லைக் கற்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அளவுப் பிரமாணங்களுக்கமைய, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எழுத்துமூல அனுமதியைப் பெற்று எல்லைக் கற்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச்செயலரால் அறிவுறுத்தப்பட்டது.