அம்பாறையில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும், பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க நாரை பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும் என இரு பகுதிகளில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டும் செவ்வாய்க்கிழமை (16.09.2025) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டன.

சம்மாந்துறை ஊழல் ஒழிப்புப் பிரிவினரினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது இந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிட்டனர்.
இதேவேளை, கசிப்பு உற்பத்தி நிலையங்களை நடத்தி வந்த சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படவிருந்த உபகரணங்களும் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் சம்மாந்துறை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.