கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு புகையிரதத்தில் கடத்தப்பட்ட 200 கிராம் போதை பொருள் அடங்கிய கைவிடப்பட்ட பை ஒன்றை வெள்ளிக்கிழமை (19.09.2025) மாலை மட்டக்களப்பு வந்தடைந்த புகையிரதத்தில் இருந்து மீட்டு ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை சம்பவ தினமான வெள்ளிக்கிழமை மாலை 4.10 மணிக்கு வந்தடைந்த புகையிரதத்தில் கைவிடப்பட்ட பை ஒன்றை புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து குறித்த பையை அங்கிருந்து மீட்டு புகையிரத அதிபரிடம் ஒப்படைத்தனர் இதனையடுத்து கைவிடப்பட்ட பை யாருடையது என அறிய பையைத் திறந்தபோது அங்கு போதை பொருள் கிடப்பதை கண்டு பொலிசாருக்கு அறிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த புகையிரத நிலையத்திற்கு சென்ற பொலிசார் குறித்த பையைத் திறந்தபோது அதில் பொதி செய்யப்பட்ட 252 பக்கட்டுக்களை கொண்ட 200 கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டனர்.
இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட போதை பொருளை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.