சம்மாந்துறை பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் – பொலிஸ் முற்றுகை.

சம்மாந்துறை,

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை 03 பகுதியில் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சனிக்கிழமை ( செப்டெம்பர் 20) சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரினால் முற்றுகையிடப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது, வீரமுனை 03 பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 60,000 மில்லிலிட்டர் கோடா கசிப்பு, 4000 மில்லிலிட்டர் ஏ சி கேஸ் சிலிண்டர் 2 ஒரு தொகை ரப்பர் மற்றும் செப்பு குழாய் என்பன மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.பிரதிப்குமார தலைமையிலான குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *