வடமேற்கு இலங்கையின் வன மடாலயத்தில் கேபிள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து கொழும்பிலிருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள நிகவெரட்டியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த மடாலயத்தில் நிகழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் ஒரு இந்தியர் உட்பட புத்த மதத்தை சேர்ந்த துறவிகள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இறந்த துறவிகள் 7 பேரில் ஒரு இந்தியர், ஒரு ரஷ்யர் மற்றும் ஒரு ருமேனிய நாட்டவர் அடங்குவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து நிகழ்ந்த மடாலயம் தியானங்களுக்கு பெயர் பெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.