துரைரட்ணம் ஜெயரூபன்
ஏழாலை தெற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
27.04.1962 – 06.10.1985


“தம்பிமார்..
எங்கட எந்த ஒரு பொருளும்
ஆமியிட்டை சிக்கக் கூடாது”

அது ஒரு முற்பகல்வேளை.

முகாமில் சாம் தனது கைத்துப்பாக்கி யைத்துப்பரவு செய்துகொண்டிருந்தான்.

அருகில் சில தோழர்கள் ஏதேதோ வேலைகளில் மூழ்கிப்போயிருந்தார்கள்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை, திடிரென்று சாம் சொன்னான்: “தம்பிமார், எங்கட எந்த ஒரு பொருளும் ஆமியிட்டை சிக்கக் கூடாது; போக விடக்கூடாது”.

அருகிலிருந்த நண்பன் சிரித்துக்கொண்டே கேட்டான், நீங்க ஆமியிட்ட அகப்படுற சந்தர்ப்பம் வந்திட்டா, இந்த றீட்டாவை என்ன செய்வீங்க அண்ணை …?”

குனிந்திருந்து துடைத்துக் கொண்டிருந்தவன் நிறுத்திவிட்டு, தலையை நிமிர்த்திப் பார்த்துச் சொன்னான்

“ஆமி இதை முழுதாக எடுக்கேலாது. அப்படி ஒரு நிலை வந்தால், றீட்டாவை அடித்து உடைத்துவிட்டுத்தான் நான் சாவன் தம்பி….”

அன்றைய நாளின் பிற்பகல் வேளை.

ஏதோ அலுவலாக, மோட்டார் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு சாம் புறப்பட்டான்.

எதிர்பாராதவிதமாக, நாயாற்றுவெளியில் பதுங்கியிருந்த இராணுவத்தினரிடம் சாம் சிக்க நேர்ந்தது. அவர்கள் வளைத்துத் தாக்க, மோட்டார் சைக்கிளைப் போட்டுவிட்டு சாம் தப்பி ஓட முயன்றான்.

நூற்றுக்கணக்கில் சுற்றிவளைத்துத் துரத்தும் படையினரை நோக்கித் தனது கைத்துப்பாக்கியால் சுட்டபடி சாம் வெளியேற முயன்றான்.

இயலுமானவரை விரைந்து ஓடினான். எவ்வளவு தூரம்தான் ஓடமுடியும்…. ? 

கைத்துப்பாக்கியின் கடைசி ரவையும் சுடப்பட்டுவிட்டது.

இராணுவத்தினர் அவனைச் சூழ்ந்து கொண்டுவிட்டனர். அதன்பின் நடந்தது யாருக்கும் தெரியாது.

ஆனால், காலையில் தான் சொன்னதையே மாலையில் அவன் அப்படியே செய்திருந்ததை, மறுநாள் இரவு ‘ரூப வாகினி’ ஒளிபரப்பிய போது அறிந்தோம்.குப்பி கடித்த வாயோடு சாம் விழுந்து கிடந்ததையும் கல்லில் அடித்து உடைக்கப்பட்ட ‘றீட்டா’ நொருங்கிக் கிடந்ததையும் கண்டோம்.

-களத்தில் இதழ் 

Leave a Reply