றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். அந்த கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்குமிடையிலான தொடர்புகள் என்ன என்பது வெகுவிரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

திங்கட்கிழமை (06.10.2025) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே சிலர் கலக்கமடைந்துள்ளனர். இந்த கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்குமிடையிலான தொடர்புகள் என்ன என்பது விசாரணைகள் மூலம் வெளிப்படும். குறிப்பிட்டவொரு குடும்பமே இவ்வாறு அளவுக்கதிக கலக்கத்தில் உள்ளது.
அந்த குடும்பம் ராஜபக்ஷ குடும்பமா இல்லது வேறு குடும்பமா என்பதை எம்மால் கூற முடியாது. ஆனால் விசாரணைகளுக்கமைய உண்மைகள் வெளிப்படுத்தப்படும்.
கைது செய்யப்படுபவர்களின் வாக்குமூலங்கள் பெறப்படும். அவ்வாறான வாக்குமூலங்களிலிருந்து கிடைக்கக் கூடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகள் எவ்வித தடைகளும் இன்றி முன்னெடுக்கப்படும். யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. விசாரணைகள் மூலம் நிச்சயம் நாட்டுக்கு உண்மைகள் வெகு விரைவில் வெளிப்படுத்தப்படும் என்றார்.