யாழ்ப்பாணம், அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பில் அரியாலை மக்கள் சார்பில் பசுமை அரியாலை இயக்கம் தெளிவுபடுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அரியாலை

அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் அவர்களின் ஊடக அறிக்கை தொடர்பில் சில தெளிவுபடுத்தல்களை வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

1.நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர், பல உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிப்பதோடு அரியாலை மக்களின் போராட்ட வடிவத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி என்னும் கோணத்தில் சிறுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார். அரியாலை மக்கள் திண்மக்கழிவகற்றல் நிலையம் தொடர்பில் இதுவரை அமைதியாக இருந்தார்கள் என்றும், தற்போது அரசியல் காரணங்களுக்காக, நித்திரையில் இருந்து திடீரென்று எழும்பியுள்ளார்கள் என்பது போன்று சித்தரிக்க முயல்கின்றீர்கள்.

2.நல்லூர் பிரதேச சபையினால், அரியாலை காரைமுனங்கில் குப்பை கொட்டுகின்ற வேலைத்திட்டம் முதன்முதலாக 2021-இல் கொவிட் பெருந்தொற்றின் போது ஆரம்பித்தது. மழைகாலத்தில் வெள்ளத்தில் மூழ்குகின்ற மயானத்தின் நிலத்தை உயர்த்துகின்றோம் என்னும் பெயரில் அனைத்து விதமான குப்பைகளையும் குழி தோண்டிப் புதைத்து நிலத்தை உயர்த்தும் பணியை தொடங்கியது. அப்போது எமது மக்கள், குறிப்பாக இளைஞர்கள், கொவிட் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது குறித்த செயற்றிட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதன் மூலம் குறித்த வேலைத்திட்டத்தை தடுத்து நிறுத்தியிருந்தனர். இன்று, அரியாலை மக்கள் எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை எனக் கூறுகின்ற நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் திரு. பத்மநாதன் மயூரன் அவர்கள் தான், அன்றும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக இருந்தார் என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம். இது தொடர்பான காணொளி ஆதாரங்கள் ஊடகங்களில் இன்னும் இருக்கின்றது. அதே நேரம் அன்றைய எதிர்ப்பு நடவடிக்கை அனைத்து ஊடகங்களிலும் செய்தியாகவும் வெளிவந்திருந்தமை யாவரும் அறிந்ததே.

3.2024-இல், நல்லூர் பிரதேச சபை அரியாலை காரைமுனங்கில் கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கான சுற்றுமதிலினை அமைக்க ஆரம்பித்தது. சந்தேகத்தின் பெயரில் பிரதேச மக்கள் வினவிய போது மயானத்தை சுற்றியே மதில் அமைக்கின்றோம் என்று பதில் வழங்கப்பட்டது. ஆதலால் அன்று அவ் வேலைத்திட்டத்திற்கு எவ்வித எதிர்ப்பையும் பிரதேச மக்களாகிய நாங்கள் தெரிவிக்கவில்லை. திடீரென மயானத்தின் புறத்தே சற்சதுர வடிவில் சுற்று மதில் அமைக்க தொடங்கினர். அப்போது தான் பிரதேச சபையின் கபட நாடகம் வெளிப்பட்டது. சுற்றுமதில் திண்மக் கழிவகற்றல் நிலையத்துக்கானது என்று அறிந்து, அதற்கான எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி 16.07.2024 அன்று கடிதம் ஒன்றினை நல்லூர் பிரதேச சபைக்கும், நல்லூர் பிரதேச செயலகத்துக்கும் அனுப்பி வைத்தோம். இருப்பினும், எமது கோரிக்கைக் கடிதத்தினைப் புறக்கணித்துவிட்டு, மதில் அமைக்கும் பணியைத் தங்கள் சபை தொடர்ந்து முன்னெடுத்து வந்தது. 

4.எங்கள் கோரிக்கையை மீள வலியுறுத்தி மீண்டும் ஒரு கடிதத்தினை 2025 ஆம் ஆண்டு தை மாதம் நாம் உங்களுக்கு அனுப்பினோம். இருப்பினும், சபையின் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதைப் பார்க்கின்ற போது, எங்கள் கடிதங்களும் அக் குப்பைக்குள் எங்காவது இருக்கும் எனக் கருதத்தோன்றுகிறது. தேர்தலின் போது வாக்கு சேகரிக்க எமது கிராமத்துக்கு வரத் தெரிந்த உங்களுக்கு, எமது பிரச்சினைகளைத் தெரிவித்த போது, எங்கள் ஊருக்கான வழி மறந்தது எவ்வாறு என்று எமக்குப் புரியவில்லை. தேர்தலின் பின்னர் எங்களிடம் எஞ்சியிருப்பது உங்கள் தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் மட்டும் தான்.

5.எமது கிராம மக்கள் 16.07.2024 அன்று மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நல்லூர் பிரதேச செயலகத்தினால், தங்களின் சபைக்கு வழங்கப்பட்ட, 21.08.2024 தேதியிட்ட கடிதத்திற்கு, ‘பொருத்தமான திணைக்களங்களின் சிபாரிசுடனேயே இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திணைக்களங்கள் எவை என்பதனையும், அத் திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களையும், அத் திணைக்களங்களினால் வழங்கப்பட்ட சிபாரிசுகளையும் பகிரங்கப்படுத்த முடியுமா? நீங்கள் மத்திய சுற்றாடல் அதிகார சபையினைத் தவிர வேறெந்த நிறுவனத்தினது ஆலோசனையையும் பெறவில்லை என்பது தான் உண்மை. நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 2024-ஆம் ஆண்டு ஆடி (July) மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நல்லூர் பிரதேச சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதிக்கு 02.09.2024 அன்றே விண்ணப்பித்துள்ளது. ஆக, கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே, அதிகார சபையிடம் சென்றுள்ளீர்கள்.

6.’மக்களின் சுகாதாரத்தினைப் பேணவும் பிரதேசத்தினை தூய்மையாக வைத்திருக்கவும் நல்லூர் பிரதேச சபை தன்னுடைய கழிவகற்றல் முகாமைத்துவத்தினை இன்றுவரை சிறப்பாக செய்து வருகின்றது,’ எனத் தெரிவித்துள்ளீர்கள். இருப்பினும், சபையினால் மேலாண்மை செய்யப்படுகின்ற இணுவில், காரைக்காலில் அமைந்துள்ள திண்மக்கழிவுகளைத் தரம் பிரிக்கும் நிலையம் தீப்பற்றியதும், மக்கள் நீதிமன்றத்தை நாடியதும், தற்போது நிலையத்தின் நடவடிக்கைகள் நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாக நிறுத்தப்பட்டிருப்பதனையும் தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். இந்தப் பின்னணியில், ‘சபை சிறப்பாக செயற்படுகிறது,’ எனக் கூறியிருப்பது மக்களை மடையர்கள் ஆக்குகின்ற முயற்சி.

7.08.10.2025 அன்று நாம் மேற்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்களுக்கு நீங்கள் கருத்துத் தெரிவிக்கையில், ‘காரைக்கால் நிலையத்தில் இருந்த திண்மக் கழிவுகளைத் தரம் பிரிக்கும் நிலையம்…,’ எனக் கூறியுள்ளீர்கள். அரியாலை காரைமுனங்கில் அமைக்கப்படுவதும் தரம் பிரிக்கும் நிலையம் தான் எனக் கூறியுள்ளீர்கள். காரைக்காலில் குப்பைகள் மலை போல் சேர்ந்ததனையும், அப் பிரதேசம் மாசடைந்ததையும், துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறியதனையும், தீப்பற்றி எரிந்ததனையும், அங்கு குப்பை கொட்டுவதற்கு எதிராக நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதையும் மறைத்து அல்லது மறந்து தரம் பிரிக்கும் நிலையம் பாதிப்பற்றது என மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறீர்கள். அதற்கும் ஒருபடி மேலே சென்று, எமது போராட்டம் அரசியல் காழ்ப்புணர்வுடனானது என்றும், போராடியவர்கள் பிரதேசம் சாராதவர்கள் என்றும் பொதுவெளிகளில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றீர்கள்.

8.கழிவு மேலாண்மை நிலையம் அமைப்பதற்கான காணி உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தங்களுடைய ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளீர்கள். இருப்பினும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக வினவிய போது, தங்களுடைய சபையும், நல்லூர் பிரதேச செயலகமும் (14.07.2025), ‘காணியை வழங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை பராதீனப்படுத்தப்படவில்லை,’ என எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளீர்கள். எமது கிராமத்தவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அளித்த 19.08.2025 தேதியிட்ட பதிலிலும் அதனையே தெரிவித்துள்ளீர்கள்.

9.அரியாலை காரைமுனங்கினைத் தவிர வேறு பிரதேசங்கள் இந்தத் தேவைக்காக கருத்திலெடுக்கப்பட்டு, பொருத்தத்தன்மை தொடர்பில் ஆராயப்பட்டதா? என்ற கேள்விக்கு, அவ்வாறு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனப் பதில் வழங்கியிருந்தீர்கள். ஆக, இது தொடர்பிலான உண்மையான கரிசனை ஏதுமின்றி, கள ஆய்வு ஏதுமின்றி, நிபுணர்களின் கலந்தாலோசனை ஏதுமின்றி, எதேச்சதிகாரமான முறையில் எமது கிராமத்தினை பலிக்கடா ஆக்கியுள்ளீர்கள். இவ்வாறான ஒரு பொறுப்பற்ற செயல், உங்களுடைய, அல்லது உங்களது உறவுகளது வீட்டிற்கு அருகாமையில் முன்னெடுக்கப்படுவதற்கு அனுமதித்திருப்பீர்களா? அதற்கு எதிராகப் போராடுபவர்களுக்கும் ‘அரசியல் காழ்ப்புணர்வு உள்ளவர்கள்’ என்று பட்டப்பெயர் வழங்கியிருப்பீர்களா?

10.நல்லூர் பிரதேச சபைக்கு சட்ட முறையில் பராதீனப்படுத்தப்படாத காணியில் எவ்வாறு மக்களின் பணத்தை செலவழித்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுகிறீர்கள் என்று வினவிய போது, ‘அவசரத் தேவையின் காரணமாக மேற்கொள்ளுகிறோம்’ எனப் பதில் வழங்கியிருந்தீர்கள். ‘அவசரம்,’ என்பதற்காக தகுந்த அனுமதிகளின்றி, தனக்கு உரித்தில்லாத காணி ஒன்றில் வேறு எவரேனும் கட்டடம் அமைப்பதற்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா?

11.யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் என்ற அடிப்படையில், இவ் விடயத்தினை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் கவனத்திற்கு எமது மக்கள் கொண்டு சென்றிருந்ததன் அடிப்படையில், இம் மாதம் ஐந்தாம் திகதி காரைமுனங்கில் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையத்தைப் பார்வையிட்டார். அவரோடு எம் கிராமத்தவர்களும் சென்றிருந்தனர். அப்போது, நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவடையாத நிலையிலேயே குப்பை கொண்டுவரப்பட்டிருப்பது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது தகுந்த பதிலினை உங்களால் வழங்கமுடியவில்லை. கொண்டுவரப்பட்டிருந்த கழிவுகள், நிர்மாணப் பணிகள் முழுமையடையாத அலுவலக கட்டடத்திற்குள் வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான கேள்விக்கும் உங்களால் பதில் வழங்கப்படவில்லை.

12.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூபா 500,000.00 மேற்பட்ட செயல்திட்டங்கள் தொடர்பில், செயல்திட்டம் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, குறித்த செயல்திட்டம் தொடர்பான இற்றைப்படுத்தப்பட்ட பூரணமான தகவலை, மக்களுக்கு, குறிப்பாக செயல்திட்டம் முன்னெடுக்கப்பட இருக்கின்ற பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டத் தேவைப்பாடு நிறைவேற்றப்படவில்லை என்பதையும் எமக்கு நீங்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளீர்கள்.

13.திண்மக் கழிவு மேலாண்மை நிலையம் அமைப்பது தொடர்பில் பிரதேச மக்களுடன் கலந்துரையாடி, தெளிவுபடுத்த வேண்டிய சட்டத் தேவைப்பாடு உள்ளதென்றும், இருப்பினும், அவ்வாறான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளீர்கள்.

14. திண்மக்கழிவு மேலாண்மை என்பது நான்கு படிமுறைகளைக் கொண்டது:

a. சேகரித்தல் (Collection)

b. வகைப்பிரித்தல் (Segregation)

c. மீழ்சுழற்சி செய்தலும் உரமாக்கலும் (Recycling and composting)

d. அகற்றல்/புதைத்தல் (Disposal/landfill)

பிரதேச சபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு வழங்கிய விண்ணப்பத்தில், சேகரித்தல், வகைப்பிரித்தல் ஆகிய முதல் இரண்டு படிமுறைகளுமே மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. முதல் இரண்டு படிமுறைகள் மட்டும் பின்பற்றப்படுகின்ற போது, சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வழங்கப்படத் தேவையில்லை என அதிகாரசபை பதில் வழங்கியிருந்தது. இருப்பினும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின், சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கை தேவைப்படுகின்ற மூன்றாவது படிமுறையான உரமாக்கலுக்குள் உள்ளடங்கும் ‘இயற்கைப் பசளை உற்பத்தி நிலையம்’ என்ற அறிவுப்புப் பலகை, 05.10.2025 அன்று அமைச்சர் குறித்த நிலையத்தைப் பார்வையிட வரும் வரை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

15.குப்பைகளை எரியூட்டுவது என்பது, நான்காவது படிமுறை. இது, சுற்றுச்சூழலுக்கும், அண்டிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கும் பாரதூரமான தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடு. இதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடமிருந்து, சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெற வேண்டியது சட்டத் தேவைப்பாடு ஆகும். வகைப்பிரித்தல் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று கூறி சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெறுவதனைத் தவிர்த்துக்கொண்ட நல்லூர் பிரதேச சபை 24.07.2025 அன்று ‘Landscaping and filling at waste burning incineration centre in Karaimunangu, Ariyalai,’ எனவும், ‘Internal roads and culverts at waste burning incineration centre in Karaimunangu, Ariyalai,’ எனவும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு உள்ளூர் தமிழ் பத்திரிகையில் கேள்வி அறிவித்தல் பிரசுரித்திருந்தீர்கள். சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தேவைப்படுகின்ற, ஆனால், இல்லாத ஒரு செயல்திட்டத்திற்கான கேள்வி அறிவித்தலை நல்லூர் பிரதேச சபை எவ்வாறு பிரசுரித்தது?

16.எமது ஊரில் குறித்த நிலையத்தை அமைப்பதனை நிறுத்துமாறு நல்லூர் பிரதேச செயலகத்துக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு, 11.09.2025 தேதியிட்ட கடிதத்தில் ‘காரைமுனங்கு இயற்கை பசளை உற்பத்தி நிலையத்திற்கு மதில் அமைத்தல் மற்றும் உற்பத்தி நிலையத்துக்கான உள்ளக வசதி அமைத்தல் ஆகிய இரு திட்டங்களுக்கும் 18.04.2024 அன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டிள்ளது. குறித்த கட்டுமானப்பணிகளை நிறுத்துவதற்கான அதிகாரம் பிரதேச செயலகத்துக்கு வழங்கப்படவில்லை,’ எனவும் பதிலளிக்கப்பட்டுள்ளது. குறித்த பதிலில் ‘காரைமுனங்கு இயற்கை பசளை உற்பத்தி நிலையத்திற்கு மதில் அமைத்தல் மற்றும் உற்பத்தி நிலையத்துக்கான உள்ளக வசதி அமைத்தல்,’ என தெரிவிக்கப்பட்டிருப்பது, நல்லூர் பிரதேச சபை ‘காரைமுனங்கு வெறுமனே தரம் பிரிக்கும் நிலையம்,’ என்று சொல்லுவதற்கு முரணாக இருக்கின்றது.

17.’மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது,’ என ஒவ்வொரு பதிலிலும் நல்லூர் பிரதேச சபை கூறி வருகிறது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை அமுல்படுத்துவது தொடர்பிலான முடிவு, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களினால், சட்டத் தேவைப்பாடுகளுக்கு அமைவாகவே எடுக்கப்பட வேண்டும் என்பதனை இச் சந்தர்ப்பத்தில் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

18.’திண்மக் கழிவகற்றல், மீழ்சூழற்சி மற்றும் உரம் தயாரிப்புக்கான ஆரம்பகட்ட செயற்பாடுகளை தவிசாளர், உப தவிசாளர், தவிசாளரின் பிரத்தியேக செயலாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்,’ என்று கூறுகின்ற பதிவொன்றினை தவிசாளர் தன்னுடைய Facebook-இல் 04.07.2025 அன்று பகிர்ந்துள்ளார். அப் பதிவில், அரியாலை காரைமுனங்கு நிலையத்தின் புகைப்படங்களே இணைக்கப்பட்டுள்ளன.

19.ஆக, எவ்வித வெளிப்படைத் தன்மையும் இன்றி, தகுந்த அனுமதிகள், ஆவணங்கள் இன்றி, ஒன்றுக்கொன்று முரணாக தகவல்களை நல்லூர் பிரதேச சபை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இவ் வேலைத்திட்டம் தொடர்பிலோ, மக்களின் முறைப்பாடு தொடர்பிலோ, மக்களை நேரடியாக சந்தித்து, கலந்துரையாடுவதற்கான எவ்வித முயற்சியும் நல்லூர் பிரதேச சபையினால் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை.

20.அபிவிருத்திக்கான வளங்கள் நிறைந்த, பொருளாதார வளம் மிக்க, இயற்கைச் செறிவு மிகுந்த, பலரது வாழ்வாதாரத்துக்கு பங்களிப்பு செய்யக்கூடிய எமது கிராமத்தில், இந் நிலையத்தை அமைப்பது எப்போதும் மீளமுடியாத பொருளாதார, சூழலியல், சுகாதாரம் சம்பந்தமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனால், எமது கிராமத்தில் குறித்த நிலையத்தினை அமைக்க வேண்டாம் என்று நாம் உங்களிடம் தொடர்ச்சியாகக் கோரி வருகிறோம்.

21.இருப்பினும், நல்லூர் பிரதேச சபையினால் எமது கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. மேலும், உங்களாலும், உங்கள் பிரத்தியேக செயலாளராலும், எமது கோரிக்கைகள், தங்களின் மீதானதும், பிரதேச சபையின் மீதானதுமான காழ்ப்புணர்வினால் மேற்கொள்ளப்படுகின்ற செயல்பாடு என அரசியல் சாயம் பூசுகின்ற செயற்பாடு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்களின் கோரிக்கையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும், மக்களின் நியாயமான கோரிக்கை என்ற ரீதியில் நீங்கள் அணுகுவில்லை. மாறாக, அரசியலாக மாத்திரமே அணுகி வருகிறீர்கள் என்பது மிகவும் துர்ப்பாக்கியமான விடயம்.

22.மக்களின் வாக்குகளால் பதவியில் அமர்ந்துள்ள நீங்களும், உங்களுடைய சக சபை உறுப்பினர்களும், ஒரு நொடியாவது அரசியல்வாதிகளாக சிந்திக்காமல், மக்கள் பிரதிநிதிகளாக சிந்தித்திருந்தால், இவ்வாறான பொறுப்பற்ற கருத்துகளைப் பொதுவெளியில் தெரிவிப்பதனையும், எம் கிராம மக்களுக்கும், கிராமத்துக்கும், தமிழ் மக்களுக்கும் மீண்டெழ முடியாத பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டத்தினை முன்னெடுப்பதனையும் தவிர்த்திருக்கலாம்.

23.நடந்தவை, நடந்தவையாகவே இருக்க, 08.10.2025 அன்று எமது கிராம மக்கள் ஒன்றுகூடி முன்னெடுத்த சனநாயகப் போராட்டத்தின் பின்னர் உங்களிடமும், ஆளுநரிடமும் கையளிக்கப்பட்ட மகஜரின் அடிப்படையில், எமது கிராமத்தின் பொருளாதார வளர்ச்சியினையும், சுற்றுச் சூழலையும் நிரந்தரமாகப் பாதிக்கக்கூடிய இச் செயல்திட்டத்தினைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

24.மேலும், எமது மக்களுடன் கலந்துரையாடி, பொருளாதார அபிவிருத்திக்கான வளங்களையும், வாய்ப்புகளையும் கொண்டுள்ள கிராமத்தினை முன்னேற்றுவதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

25. 2021-இல் முதன்முறையாக அரியாலை காரைமுனங்கில் குப்பை கொட்டப்பட்டதிலிருந்து இன்று வரை நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைத்தவர்களின் கூட்டணி மாற்றம் என்பது உங்களுடைய அரசியல் ஏற்பாடுகளே தவிர, எமது கிராமத்தில் குறித்த நிலையத்தை அமைக்க வேண்டாம் என்று, நாம், மக்கள் வரிப்பணத்தில் இயங்குகின்ற நல்லூர் பிரதேச சபை என்ற நிலையான அரச கட்டமைப்பிடமே கோரி வருகிறோம் என்பதையும் சுட்டிக்காட்ட விருப்புகிறோம்.

26.அரியாலை கிராமம் என்பது மிகப் பெரியது. எமது கிராமத்தின் அனைத்து மூலை முடக்குகளில் இருந்தும் எமது மக்கள் 8.10.2025 (பணி  நாள் ஒன்றில், பணி நேரத்தில்) இடம்பெற்ற அடையாள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்கள் என்பதனை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். அவ்வாறான ஒரு சூழ்நிலையில், ‘ஒட்டுமொத்த கிராமமும், தவறாக வழிநடத்தப்படுகிறது,’ என மக்கள் பிரதிநிதியான நீங்கள் பொறுப்பற்ற முறையில் ஊடகங்களில் அறிக்கை விடுவது வருத்தத்திற்குரியது.

27.அரியாலை கிராமம் என்பது, முழுக் கிராமமாக ஓன்று திரண்டு 106 வருடங்களாக சுதேசிய திருநாட்கொண்டாட்ட விழாவினை கொண்டாடி வருகின்ற ஓர் ஊர். ஊர் நலனுக்காக எம் மக்கள் எட்டாம் திகதியன்று ஒன்றுகூடியதனைத் நீங்கள் அன்று கண்டீர்கள். எமது கிராமத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவாளர்களும், உறுப்பினர்களும் உண்டு. அன்றைய போராட்டத்தில் உங்கள் கட்சி உறுப்பினர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். எமது மக்களின் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுகின்ற முயற்சியினைத் தயவு செய்து நிறுத்துங்கள். அரியாலை மக்களின் ஒற்றுமையும், எமது ஊர் மீது நாங்கள் வைத்துள்ள பற்றுணர்வையும் மலினப்படுத்தாதீர்கள். எமது போராட்டத்தினை மடைமாற்றும் வேலைத்திட்டத்தைக் கைவிட்டு எமது நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளியுங்கள்.

28.இங்கு கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் நல்லூர் பிரதேச சபை உட்பட்ட அனைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களாலும் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட ஆவணங்களும், பதில்களும், சமூக ஊடகப்பதிவுகளின் பிரதிகளும், பத்திரிகை, இணையச் செய்திகளும் எம்மால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

29.தாங்களும், ஏனைய சபை உறுப்பினர்களும், நல்லூர் பிரதேச சபை பணியாளர்களும், மக்களை முன்னிறுத்திய சேவையில் தொடர்ந்து ஈடுபட இறைவன் திருவருள் புரிய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றோம்.

அரியாலை மக்கள்
பசுமை அரியாலை இயக்கம்
13 ஐப்பசி 2025

Leave a Reply