ஓயாமல் வீசி எம் அடிமை விலங்குகளை உடைத்து எமது நிலங்களை மீட்டெடுத்த தமிழர் சேனையின் ஒரு பெரும் சமர் அலைதான் இந்த ”ஓயாத அலைகள் மூன்று” படை நடவடிக்கை

முன்னுரை
ஓயாமல் வீசி எம் அடிமை விலங்குகளை உடைத்து எமது நிலங்களை மீட்டெடுத்த தமிழர் சேனையின் ஒரு பெரும் சமர் அலைதான் இந்த ”ஓயாத அலைகள் மூன்று” படை நடவடிக்கை ஆகும். இது தமிழீழ விடுதலைப்புலிகளால் 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்குத் தொடங்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு சூன் மாதம் 19ம் திகதி வரை தொடர்ந்து ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. இந் நடவடிக்கை மூலம், சிங்களவரின் பல்வேறு காலகட்டப் படையெடுப்புகளால் வல்வளைக்கப்பட்டு இழக்கப்பட்ட தமிழரின் ஆட்புலங்களின் பல நிலப்பரப்புகள் மீட்டெடுக்கப்பட்டன.
இவ் அலையானது தொடர்ந்து ஒரே திசையில் வீசவில்லை. அது பல்வேறு சமயங்களில் தேவை கருதி இடைநிறுத்தபட்டு தமிழர் நிலங்கள் மீட்டெடுக்கப்படுவதற்காக வேறு திசைகள் நோக்கி திருப்பப்பட்டது. முதலில் வன்னியின் தென் திசையில் இரு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையானது பின்னர் வடதிசை நோக்கி திருப்பப்பட்டு மூன்று கட்டங்களாக வடிவாகப் போனது வரலாறு. இதன்போதுதான் 2 ஆண்டுகளாக சிங்களப்படைகள் வல்வளைத்த தமிழர் நிலங்களை 2 கிழமைகளில் மீண்டும் அடித்துப் பிடித்த ஒரு பெரும் சாதனை நடவடிக்கையும் அரங்கேறியது. பேந்து, குடாரப்பு தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டு ஆனையிறவு அதிர்ந்து வீழ்ந்து சாவகச்சேரி மீட்டெடுக்கப்பட்டது வரை மற்றொரு சிறு பரணி ஆகும்!
இத்தொடர் நடவடிக்கை மூலம் ஆறாயிரத்திற்கும் அதிகமான(துல்லியமான எண்ணைக்கையினை இருதரப்பும் வெளியிடவில்லை) சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டோ காணாமலோ போயுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு பற்றியம் தெரிவித்ததாக புலிகள் செய்தி வெளியிட்டிருந்ததும் பல்லாயிரம் பேர் காயமடைந்தும் பல கோடி உரூபாய் பெறுமதியான போர்த் தளபாடங்கள் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டமையும் பெரும் வரலாறாகும். இங்குதான் முதன்முதலாக புலிகளால் 152 மிமீ தெறோச்சிகள்(3) கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னைய பல படை நடவடிக்கைகள் மூலம் சிங்களப் படைகளால் வல்வளைக்கப்பட்டிருந்த 2500 ச.கிமீ இற்கும் அதிகமான நிலப்பரப்பு தமிழரால் மீட்கப்பட்டது.
இதன் வலிதாக்குதல் நடவடிக்கைகள் சூன் 19ஓடு நிறுத்தப்பட்டாலும் இந்நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டிருந்த யாழப்பாணத்தின் வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகள் யாவும் முற்றுமுழுதாக செப்டம்பர் 17 வரை புலிகளால் தக்கவைக்கப்பட்டு அதன் பின்னர் நடைபெற்ற சமர்களின் பின்னரே அந்நிலப்பரப்பிலிருந்து புலிகள் பின்வாங்கத் தொடங்கினர். இப்பின்வாங்கல் செயல்பாடானது அடுத்த ஆண்டு, 2001, சனவரி வரை தொடர்ந்து அம்மாதம் 7ம் திகதியோடு புலிகள் கைப்பற்றிய நிலங்களைக் கைவிட்டு வடமராட்சியில் நாகர்கோவிலிலும் தென்மராட்சியில் முகமாலை வரையிலும் பின்வாங்கி இவ்விடங்களில் நிலைபெற்றனர்.
ஓயாத அலைகள் மூன்றினை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ‘நில மீட்புச் சமர்’ என அடையாளமிட்டர் (எரிமலை நவம்-டிசம் 99). இந்நடவடிக்கையின் தொடக்க கட்ட வேகத்தால் சிங்கள படைத்தரப்பிற்கு ஏற்பட்ட படுமோசமான தோல்விகள் குறித்து பரவலறி சிறீலங்கா படைய பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் அவர்கள் ‘சன்டே ரைம்ஸ்’ வாரயேட்டில் 07-11-1999 அன்று எழுதுகையில், ‘ஆண்டுகளில் எடுத்தவற்றை நாட்களில் இழந்தனர்’ எனக் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது ஆகும்.
இவ்வாறாக வன்னியில் தமிழர் ஆதி நிலங்களை மீட்டெடுத்த இந்நடவடிக்கையினைப் பற்றியே முற்றுமுழுதாக இவ்வாவணக்கட்டில் வழங்கப்போகிறேன்; வாசிக்கப்போகின்றீர்கள்.
மேலும், இத்தாக்குதலில் பங்குபெற்றி பின்னாளில் வஞ்சர்களாகிய ‘கருணா’ முதலிய வஞ்சகர்களது வீரங்களும்(புலியாக இருந்தபோது என்பதால் ‘வீரம்‘ என்று குறிப்பிடுகிறேன்) ஒரு வரி பிசகாமல் முற்றாக விரிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புவதோடு மற்றொன்றையும் விதப்பாக முரசறைய விரும்புகிறேன். அதாவது, இத்தாக்குதலில் பங்குபெற்றி பின்னாளில் தமிழீழ தேச வஞ்சகர்களாகியோரும்(கருணா உட்பட) அவ்வாறாகி சாவொறுப்பு பெற்றோருமான ராபேட், இனிதன் எ தாத்தா மற்றும் ஏனையோரின் தரநிலைகள் ஏதும் குறிப்பிடப்படாது என்பதே அதுவாகும். அத்துடன் இவ் ஆவணக்கட்டில் நான் குறிப்பிடும் அனைத்து படைத்துறை தரநிலைகளும் 2000 ஆம் ஆண்டில் தமிழர் சேனையின் கட்டளையாளர்கள் மற்றும் போராளிகள் பெற்றிருந்தவையாகும். வரலாற்றை தக்க வைப்பதற்காகவும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவுமே இவ்வாறு செய்கிறேன்.
- குறிப்பு: இதனை ஒரு வரலாற்று ஆவணமாக காக்கும் பொருட்டு இதனுள் என்னால் எழுதப்பட்ட தகவல் யாவும் – படைத்துறையின் படைக்கலன்கள் – எமது தாய்மொழியான தமிழில் மட்டுமே எழுதப்பட்டிருக்கும்.
- Artillery – சேணேவி
- Howitzer – தெறோச்சி
- Mortar – கணையெக்கி
- Tank – தகரி
- Battalion – சமரணி
- Brigade – படைத்தொகுதி