இந்த ஆண்டு இதுவரை இலங்கை 2.22 லட்சம் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது: வருவாய் 587 பில்லியன் ரூபாய் – சுங்கத் துறை

கொழும்பு

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,22000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், வாகன இறக்குமதி ஊடாக மாத்திரம் 587 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவுக்கு சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் அண்மையில் முன்னிலையாகியிருந்தனர்.

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டு ஒவ்வொரு மாதமும் சுங்கத் திணைக்களத்தின் வருமானம் ஒப்பீட்டளவில் உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர்.

2025.10.14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாகன இறக்குமதி ஊடாக மாத்திரம் 587 பில்லியன் ரூபாய் வருமானம் திரட்டப்பட்டுள்ளதுடன், அது சுங்கத்தின் மொத்த தேறிய வருமானத்தின் 37 சதவீதமாக பதிவாகியுள்ளது.

நடப்பாண்டின் முதல் பத்து மாதகாலப்பகுதியில் 55,447 மோட்டார் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு 474.26 பில்லியன் ரூபாய் சுங்க வரி வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் 7331 பண்ட விநியோக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு 48.67 பில்லியன் ரூபாய், 142,524 மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு 30.37 பில்லியன் ரூபாய், 15,035 முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டு 15.10 பில்லியன் ரூபாய்,1676 பேருந்துகள் மற்றும் வேன்கள் இறக்குமதி செய்யப்பட்டு 12.66 பில்லியன் ரூபாய் சுங்க வரி வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசுடமையாக்கப்பட்ட பண்டங்கள் மற்றும் உபகரணங்களை ஏலத்துக்கு விடுவதற்கு டிஜிட்டல் முறைமையை அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் குறிப்பிட்டனர்.

இலங்கை சுங்கத் திணைக்களம் 2025 செப்டம்பர் மாதமளவில் 1485 பில்லியன் ரூபாய் வருமானத்தை இலக்கிட்டிருந்த நிலையில் அக்காலப்பகுதியில் 1737 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது எனவும் அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.

Leave a Reply