சுதந்திரபுரம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு
சுதந்திரபுரம்
உடையார்கட்டு வடக்கு மற்றும் தெற்கு சுதந்திரபுரம் இருட்டுமடு மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டனர்.
மாவீரர் நாளினை முன்னிட்டு முல்லை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் நெதர்லாந்து மக்களின் நிதிப்பங்களிப்புடன் புதுக்குடியிருப்பு பிரதேச மாவீரர் பெற்றோர்கள் 125 க்கு மேற்பட்டோர் பங்கேற்புடன் பொதுநோக்கு மண்டபத்தில் (18.11.2025) அன்று காலை 11.00 மணியளவில் ஆரம்பமானது.

முதல் நிகழ்வாக மூன்று மாவீரரின் தாயார் பொதுச்சுடரேற்ற, பொதுப் படத்திற்கான மலர் மாலையினை மாவீரர்களின் பிள்ளைகள் அணிவித்து வைக்க மலர் வணக்கத்தினை 2 மாவீரரின் தந்தை ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து பெற்றோர்கள் ஈகைசுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. அதன் பின் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
பின் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் மாவீரர்களின் நினைவு சுமந்த உரைகள் உணர்வோடு வழங்கியிருந்தனர். தொடர்ந்து தேனீர், சிற்றுண்டியும் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அனைவருடனும் கலந்துரையாடி இறுதியாக மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. உணர்வு பூர்வமான நிகழ்வு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவீரர்களின் உறவினர்கள், மக்களென பலர் உணர்வோடு கலந்துகொண்டிருந்தனர்.












