மாவீரர் குடும்ப உறவுகள் மதிப்பளித்தல் நிகழ்வு கொக்கட்டிச் சோலை

22.11.2025 | கொக்கட்டிச்சோலை

“கடந்தகாலத்தில் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பில் இந்த அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் வாய்மூடிகளாகவேயிருந்தனர்.” இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களை ஊக்குவிப்பவர்களாகவே கடந்தகாலத்தில் இன்றைய தேசிய மக்கள் முன்னணியினர் இருந்தனர் என தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

1990 ஆண்டு பிரேமதாச பதவியேற்றபோது வடக்கிற்கு சுயாட்சி தருகின்றோம் கிழக்கினை விடுங்கள் என தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனிடம் அவர் கோரியபோது இல்லை,வடகிழக்கு தான் தமிழர்கள் தாயகம் என்று கூறி அதனை மறுத்த காரணத்தினால் போர் மீண்டும் மூண்டது எனவும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கனடா வாழ் உறவுகளின் பேராதரவுடன் மாவீரர் பெற்றோர்கள், மாவீரர் குடும்ப உறவுகள் மதிப்பளித்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (21.11.2025) கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள், மாவீரர் பெற்றோர்கள், குடும்ப உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மாவீரர் பெற்றோர்கள் குடும்ப உறவுகள் மங்கல வாத்தியங்கள் சகிதம் அழைத்து வரப்பட்டதுடன், தமிழ் மக்களின் அடிப்படை உரிமை மற்றும் அரசியல் அபிலாசைகளை முன்நிறுத்தி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் முகமாக இரண்டு மாவீரர்களை ஈன்ற தாய் ஒருவரால் பிரதான ஈகைச் சுடரேற்றப்பட்டது.

தொடர்ந்து வருகை தந்த பெற்றோர்களால் கண்ணீர்மல்க தன் மாவீரச் செல்வங்களை நினைத்து ஈகைச் சுடர்களை ஏற்றினர். பின்னர் மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர், மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு விருந்தோம்பும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், பழமரக் கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply