பிரான்சுக்கு போலி விசாக்களை ஏற்பாடு செய்து கொடுத்த கும்பலை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

03-12-2025 | புதுடில்லி –

தமிழகத்தைச் சேர்ந்த பிரபாகரன், 28, நவீராஜ், 23, மோகன் காந்தி, 38, ஆகிய மூவர் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்வதற்காக, அக்டோபர் 28ம் தேதி டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றனர்.

அங்குள்ள மூன்றாவது முனையத்தில் குடியேற்ற சோதனைக்காக பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை வழங்கிய போது, அவை போலி என தெரிந்தது. இதையடுத்து, மூவரும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில், 6 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த போலி விசாக்களை அவர்கள் பெற்றது தெரிந்தது.

போலி விசாவுடன் சிக்கிய மூன்று பேரும், நாமக்கல்லைச் சேர்ந்த கண்ணன், 55, என்ற முகவருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து விசாக்களை பெற்றுள்ளனர். அவர், பரமத்தியில் ஐ.டி.ஐ.,யும், ‘வெற்றி ஓவர்சீஸ்’ என்ற வெளிநாட்டு வேலைக்கான ஆலோசனை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சாதிக் சையத் எனும் மற்றொரு முகவருடன் சேர்ந்து, வேலை தேடி வந்த 16 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி விசா ஏற்பாடு செய்து தந்ததை ஒப்புக்கொண்டார். சாதிக்கை தேடும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

கடந்த மாதம், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தில் ‘எச்1பி’ விசா திட்டத்தில் முறைகேடு நடப்பதாக, அந்நாட்டின் குடியரசு கட்சி முன்னாள் எம்.பி., டேவ் பிராட் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில், பிரான்ஸ் போலி விசா கும்பலைச் சேர்ந்த முகவர்கள் சிக்கியுள்ளனர்.

Leave a Reply