பாஜவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின்
15-12-2025 | புதுடில்லி
இன்று பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பாஜவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நேற்று நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று டில்லி வந்த அவர், பாஜ தலைமை அலுவலகம் வந்தார். அங்கு அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள் உபாத்யாயா சிலைக்கு நிதின் நபின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் பாஜவின் செயல் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். நிதின் நபினுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜேபி நட்டா மற்றும் பாஜ நிர்வாகிகள் ஆகியோர் மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
எல்லா தேர்தல்களிலும் வெற்றி
முன்னதாக நிதின் நபின் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பாஜ எப்போதும் இளைஞர்களை ஊக்குவிக்கிறது. இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காக பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் கட்சியின் மேலிடத் தலைமைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் கூட்டாக போட்டியிட்டு அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவோம். கட்சியை வலுப்படுத்துவதும், கட்சியில் புதிய தலைமையை உருவாக்குவதும் எனது முன்னுரிமையாக இருக்கும். என் தந்தையின் ஆசிர்வாதத்தால் தான் இந்த 20 ஆண்டுகளில் நான் இருக்கும் இடத்தை அடைந்துள்ளேன். இவ்வாறு நிதின் நபின் தெரிவித்துள்ளார்.