
19.04.2025 – இலங்கை
புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமெனில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் அரங்கேற்றியிருக்கும் நாடகமே பிள்ளையானின் கைதாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
களுத்துறை பிரதேசத்தில் சனிக்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் வெளியேறியதால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்ச்சியடைந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போராட்டங்களுக்கு தலைமை வகிக்கவில்லை.
விஜேவீரவைப் போன்று அவரும் தலைமறைவாகவே இருந்தார். இந்நிலையில் போராட்டத்தை வழிநடத்திய ஒருவதே கருணா அம்மான். அவரது மிக முக்கிய சகாவாக பிள்ளையான் இருந்தார்.
ஆணையிறவு உட்பட 14 இராணுவ முகாம்களை சுமார் 4 நாட்களில் புலிகள் அழித்தனர். இந்த அனைத்து தாக்குதல்களையும் கருணா அம்மானே மேற்கொண்டார். கருணா அம்மானின் மாற்றத்தினாலேயே கிழக்கு மாகாணத்தை புலிகள் இழந்தனர்.
கருணா இருந்திருந்தால் இராணுவத்தினரால் ஒருபோதும் தொப்பிகலவை கைப்பற்றியிருக்க முடியாது. இந்திய இராணுவம் கூட தொப்பிகலவுக்குச் செல்ல அஞ்சியது.
கருணா அம்மான் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே தொப்பிகலவையும் கைப்பற்ற முடிந்தது. கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் புலிகளிலிருந்து பிரிந்த பின்னரே என்றுமே கைப்பற்றப்ப முடியாது என பிரபாகரன் சவால் விடுத்திருந்த தோராபோரா மலையைக் கூட கைப்பற்ற முடிந்தது.
அது மாத்திரமின்றி கிழக்கு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னரே ஆயுத பரிமாற்றமும் நிறுத்தப்பட்டது.
எதிர்காலத்தில் தாம் பாதுகாக்கப்படுவோம் என்று நம்பியே கருணாவும் பிள்ளையானும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினர். அவ்வாறிருக்கையில் அரசாங்கம் அவர்களைக் காட்டிக் கொடுத்தால் அது நியாயமற்றது.
இதன் ஊடாக வடக்கு புலம்பெயர் தமிழர்கள் ஊடாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கருணா மற்றும் பிள்ளையான் கைது செய்யப்படுவது புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகும்.
இதனை நோக்கமாகக் கொண்டே அரசாங்கம் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது. கருணா, பிள்ளையான் கொல்லப்படும் நானே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியடையும் நாளாகும். கலாநிதி என்.எம்.பெரேரா கூறியதைப் போன்று இன்று எதிரியின் எதிரி நண்பனாகியிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் எதிரி கருணா அம்மான். கருணா அம்மானின் எதிரி புலம் பெயர் ஈழத்தமிழர்கள். புலம் பெயர் ஈழத்தமிழர்களின் நண்பன் ஜே.வி.பி. ஆகும். இது வரலாற்று பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றார்.
பகிரவும்: