
21.04.2025 – மும்பை
மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில், தலா ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை, சென்னை அணிகள் மோதின. சென்னை ‘லெவன்’ அணியில் ராகுல் திரிபாதி நீக்கப்பட்டு, 17 வயதான ஆயுஷ் மாத்ரே இடம் பெற்றார். ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
சென்னை அணிக்கு ரச்சின் ரவிந்திரா (5) ஏமாற்றினார். அஷ்வனி குமார் வீசிய 4வது ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் விளாசிய ஆயுஷ் மாத்ரே (32) ஓரளவு கைகொடுத்தார். மற்றொரு துவக்க வீரர் ஷேக் ரஷீத் (19) நிலைக்கவில்லை.
பின் இணைந்த ரவிந்திர ஜடேஜா, ஷிவம் துபே ஜோடி நிதானமாக விளையாடியது. ஆட்டத்தின் 11வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 3 ரன் மட்டும் விட்டுக்கொடுத்தார். பவுல்ட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய துபே, பாண்ட்யா பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். பவுல்ட் வீசிய 15வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய துபே, அஷ்வனி குமார் பந்தில் வரிசையாக 2 சிக்சர் அடித்து அரைசதம் எட்டினார். நான்காவது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்த போது பும்ரா பந்தில் துபே (50 ரன், 4 சிக்சர், 2 பவுண்டரி) அவுட்டானார்.
அடுத்து வந்த கேப்டன் தோனி (4), பும்ராவிடம் சரணடைந்தார். பவுல்ட் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஜடேஜா, 34 பந்தில் அரைசதம் கடந்தார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்தது. ஜடேஜா (53 ரன், 2 சிக்சர், 4 பவுண்டரி), ஓவர்டன் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரோகித் அபாரம்:
சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு ரியான் ரிக்கிள்டன், ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார் ரிக்கிள்டன். ஜேமி ஓவர்டன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித், கலீப் வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். ஓவர்டன் வீசிய 5வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடிக்க 18 ரன் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த போது ஜடேஜா ‘சுழலில்’ ரிக்கிள்டன் (24) சிக்கினார்.
பொறுப்பாக ஆடிய ரோகித், 33 பந்தில் அரைசதம் எட்டினார். ஜடேஜா வீசிய 9, 11வது ஓவரில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த சூர்யகுமார் யாதவ், நுார் அகமது வீசிய 13வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டினார். அபாரமாக ஆடிய சூர்யகுமார், 26 பந்தில் அரைசதம் விளாசினார். பதிரானா பந்தில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்ட சூர்யகுமார் வெற்றியை உறுதி செய்தார்.
மும்பை அணி 15.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் (76 ரன், 6 சிக்சர், 4 பவுண்டரி), சூர்யகுமார் (5 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.
பகிரவும்: