24.04.2025 – ராமேஸ்வரம்
கடலில் பாலம் அமைத்து, சீதையை ராமர் மீட்டு வந்ததாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த, 1914 முதல் 1964 வரை தனுஷ்கோடி – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இருந்த சமயத்தில், சுற்றுலா பயணியர் ராமர் பாலத்தைக் கண்டு ரசித்தும், தரிசித்தும் சென்றனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை – இலங்கை தலைமன்னார் இடையே, 29 கி.மீ., உள்ள கடல் பகுதியில், ராமர் பாலம் மீது, 14 முதல் 18 மணல் தீடைகள் உள்ளன. அரிச்சல் முனையில் இருந்து, 5 முதல் 6 தீடையுடன் இந்திய எல்லை முடிந்து விடும். மீதமுள்ள தீடைகள் இலங்கை வசம் உள்ளன.
ராமர் பாலத்திற்கு படகு இயக்க, இலங்கை மன்னார் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலா, பாதுகாப்புத்துறை அதிகாரிகள், போலீசார் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், மே, 15 முதல் தலைமன்னாரில் இருந்து சுற்றுலா படகு சவாரி துவக்க முடிவு செய்தனர்.
இதன் வாயிலாக, உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணியரையும் கவர்ந்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
பகிரவும்: