21.05.2025 – வடகிழக்கு.
வடக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அடுத்து, வெளிநாடுகளில் அல்லது தூர பிரதேசங்களில் வசிக்கும் காணி உரிமையாளர்களின் உரித்தை நிரூபிப்பதற்கான ஆவணத் தயாரிப்புக்களை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இதுகுறித்த இலவச சட்ட ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்கு நிரப்பவேண்டிய விபரங்களின் இணைப்பையும் வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமைகோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பூர்வீக காணிகளை சட்ட ரீதியாகப் பாதுகாப்பதற்குத் தம்மிடம் இலவச சட்ட ஆலோசனை பெறுமாறும், இந்த இலவச சட்ட ஆலோசனையை வழங்குவதற்காகத் தன்னார்வ அடிப்படையில் சட்டத்தரணிகள் பலர் முன்வந்திருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 அன்று வெளியான வர்த்தமானியின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக கடந்த 18 ஆம் திகதி காணி அமைச்சினால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உங்களது காணியை நீங்கள் எவரும் உரிமை கோரவில்லை எனில், அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது எனக் கட்டாயமாகப் பிரகடனம் செய்யப்படும் என காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 5(1) ஆம் பிரிவு கூறுகின்றது.
எனவே உங்களது நில உரிமையை இழந்துவிடாமல் பாதுகாப்பதற்கு இப்போதே நடவடிக்கை எடுங்கள்.
அதேவேளை இதுதொடர்பாக வெளிநாடுகளில் அல்லது தூர பிரதேசங்களில் வசிக்கும் காணி உரிமையாளர்கள் தமது உரித்தை நிரூபிப்பதற்கான ஆவணத் தயாரிப்புக்களை மேற்கொள்ளவுள்ளோம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSctn39Ae9PicR01QWYt1EVw_xDiCHW3pXpwDjlEoZ6Ib6kFeA/viewform?usp= எனும் இணைப்பில் பிரவேசித்து, அதில் கோரப்பட்டுள்ள விபரங்களை நிரப்புவதன் ஊடாக இலவச சட்ட ஆலோசனையைப் பெறமுடியும் என அப்பதிவில் தெரிவித்துள்ளார்.