25.05.2025 – கொழும்பு.
அரசாங்கம் புதிய பதிலீட்டு சட்டம் தயாரிக்கப்படும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்காது எனின், குறைந்தபட்சம் அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதை இடை நிறுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கும் அதேவேளை, அதனைப் பதிலீடு செய்யும் வகையில் உருவாக்கப்படும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் நீதியமைச்சினால் பொதுமக்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன்,
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான புதிய சட்ட உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் பரிந்துரைகளைக் கோரியிருப்பது நேர்மறையானதொரு விடயமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்கும் வரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை எனவும், புதிய சட்டத்தை உருவாக்குவது என்பது பல கட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் நிகழவேண்டிய நீண்ட செயன்முறை என்பதனால், அதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்காது எனின், குறைந்தபட்சம் அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதை இடைநிறுத்தவேண்டும்.
அதேபோன்று புதிய சட்டம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு 14 நாட்கள் கால அவகாசம் போதுமானதன்று. மாறாக குறைந்தபட்சம் ஒருமாத கால அவகாசத்தையேனும் வழங்கவேண்டும் எனவும் அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.