ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இடையே, 2022 முதல் போர் நடந்து வருகிறது. இரு நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்காவின் அலாஸ்காவில் கடந்த மாதம் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு அடுத்த நாள், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். உடனடி போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என கோரினார். அதற்கு டிரம்ப் சம்மதம் தெரி வித்தார்.
இருப்பினும், அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ ரெபெலோ உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர் .
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஸ்காட் ரிட்டர் கூறியுள்ளதாவது:
அதிபர் டிரம்ப், ரஷ்யாவுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கடும் எதிர்ப்பு உள்ளது. ரஷ்யா – அமெரிக்கா உறவை மேம் படுத்தும் முயற்சிகளை எதிர்க்கும் இந்த மக்கள், அதற்காக உக்ரைனை பலிகடாவாக்க தயாராக உள்ளனர்.
இது உண்மையிலேயே நடக்க உள்ளது. அவர்கள் உக்ரைனின் இளம் மரபணுக்களை அழிக்க உள்ளனர். இதற்காக விரைவில், 18 வயது இளைஞர்களை ரஷ்ய வீரர்களுக்கு எதிராக போரிட களத்திற்கு அனுப்ப உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
உக்ரைனில் ராணுவத்தில் இணைய தகுதியான வயது, 25 முதல் 60 வயது ஆகும். ‘போர் துவங்கியதிலிருந்து ராணுவத்தில் சேர பலரும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ‘இதை விரும்பாத இளைஞர்கள், நாட்டை விட்டு தப்பிச் செல்கின்றனர்’ என, ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.