அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது 108 ஆம்புலன்ஸ் சென்றது. நோயாளி இல்லாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் வெறும் வாகனத்தை வேண்டுமென்றே ஓட்டிக்கொண்டு வருவதாக இபிஎஸ் குற்றம் சாட்டினார். இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் மீது கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

இதன் பிறகு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்துபவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த சூழலில், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று (செப்.,03) விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
* ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல.
* ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
* எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், சமூக அமைப்பாக இருந்தாலும் ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும்.
* பொதுக்கூட்டங்களில் மக்கள் அதிகமாக இருந்தாலும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட வேண்டும்.
* அனைத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமா?
* ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் வழிமறித்து தாக்கினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஆம்புலன்ஸ் பணியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக எடுத்த நடவடிக்கை பற்றி டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.