இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. – அமைச்சர் ஆனந்த விஜேபால

இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இவர்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும், எவ்வித பாகுபாடும் இன்றி அவர்கள் கைது செய்யப்படுவர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸார் தமக்கு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். எனவே அரசியல் பழிவாங்கலை முன்னெடுப்பதற்கான எந்தவொரு தேவையும் எமக்கு இல்லை. நீண்டகாலமாக இழக்கப்பட்ட நீதி தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

மக்களால் பல்வேறு தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை குறித்த விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாளாந்த புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கும் போது, அவற்றுக்கு எதிர்க்கட்சியினர் பதிலளிக்க முற்படுகின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை அவர்கள் அரசியல் பழிவாங்கல் என சித்தரிக்கின்றனர்.

அண்மையில் இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய அவர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான அறிக்கைகளும் கிடைத்தவண்ணமுள்ளன. இவற்றுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டிருந்தால், அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின்வாங்கப் போவதில்லை.

இவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் அச்சமடையவோ பதற்றமடையவோ தேவையில்லை. மாறாக குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக எவ்வித பாகுபாடும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

இலங்கையில் பண்டாரவளை குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்!

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!