2 நாள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் திம்புவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: டில்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன். டில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பவத்திற்கு ஆதரவாக தேசம் துணை நிற்கும்.
குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதன் பின்னணியில் உள்ள சதிக்காரர்களை தப்பிக்க விடமாட்டோம். இந்த சதித்திட்டத்தின் வேர் வரை சென்று, பின்னால் இருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்படுவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். கோழைத்தனமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாளை (நவ., 12) மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பூடானில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி நேரடியாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.