பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு தற்காலிக வீடுகள் கட்ட திட்டம் – செந்தில் தொண்டமான்

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு பொது நன்கொடையாளர்களின் உதவியுடன் தற்காலிக வீடுகளை விரைவாகக் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழுப்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமை காரியாலயத்தில் திங்கட்கிழமை (08-12-2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்து ‘சௌமிய தான யாத்ரா’ மூலம் நிவாரண பொதிகளை வழங்கி வைத்திருந்தோம். உடைமைகளை இழந்து தற்காலிக இடம்பெயர்ந்து பாடசாலைகள் கலாசார நிலையங்களில் தங்கியுள்ள தோட்டத் தொழிலாளர்களின் உடனடி அவல நிலையை பார்க்க முடிந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உள்ள முதன்மையான கவலை என்னவென்றால், அவர்கள் சேதமடைந்த தங்கள் வீடுகளுக்கு திரும்புவார்களா அல்லது நிரந்தரமாக புதிய நிலங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்களா என்பது குறித்த எதிர்கால நிச்சயமற்ற தன்மைதான்.

தோட்ட நிர்வாகத்துடனான கலந்துரையாடல்களின்போது, மீளக்குடியமர்வுக்கான மாற்று நிலங்களை அடையாளம் காணும் முக்கியமான பணியைத் தொடங்குவதற்கு முன்னர், அவர்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் அறிக்கைக்காகக் காத்திருப்பதாகத் தெரியவந்தது.

தற்காலிகத் தங்குமிடங்களில் நீண்ட காலம் தங்குவதைத் தடுக்கும் நோக்குடன் இலங்கை முதலாளிகள் சங்கத்தின் பொது நிர்வாக இயக்குனர் வஜிர உடன் இன்று கலந்தாலோசித்தேன். அனைத்து 22 நிறுவனங்களும் மாற்று நிலங்களை முன்கூட்டியே அடையாளம் காணும் அவசியமான செயல்முறையை உடனடியாகத் தொடங்கும்படி அறிவுறுத்த வலியுறுத்தினேன்.

இதன் மூலம், அறிக்கைகள் இறுதி செய்யப்பட்டவுடன், பொது நன்கொடையாளர்களின் உதவியுடன் தற்காலிக வீடுகளை விரைவாகக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

இலங்கையில் பண்டாரவளை குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்!

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!