
டெல்லியில் உள்ள புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிக் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.
புது டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் ரிது சக்சேனா, பிபிசி ஹிந்தியிடம் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார்.
சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததைத் தொடர்ந்து, இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
”அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும்” தனது அனுதாபங்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
நேரில் பார்த்தவர்கள் கூறுவதென்ன?
பிராயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவுக்குச் செல்ல வந்தவர்கள், அங்கிருந்து டெல்லி திரும்பியவர்கள் என ரயில் நிலையத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது எனச் சம்பவ இடத்திலிருந்தவர்கள் பிபிசி ஹிந்தியிடம் கூறினர்.
ரயில் நிலையத்தில், இரண்டு ரயில்களின் வருகை தாமதமானது.மேலும் கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜுக்கு ஒரு ரயில் கிளம்ப இருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
“நான் இரவு 9.15 மணிக்கு புது டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்தேன். நான் வந்தபோது, ரயில் நிலையத்தில் ஒரு பெரும் கூட்டம் இருந்தது. ரயில்வே நிலையத்தின் வெளியேறும் வழியில் இருந்தும் மக்கள் உள்ளே நுழைந்தனர். எனது தாயார் நூலிழையில் மரணத்திலிருந்து தப்பினார். நாங்களும் இதிலிருந்து காப்பாற்றப்பட்டோம். எங்கள் கண் முன்னே ஒரு வயதான பெண்மணி மயக்கமடைந்தார்”, என்று இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மனோரஞ்சன் ஜா தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள முக்கிய ரயில் நிலையமான இங்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடி இருந்ததால், தன்னால் ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்ல முடியவில்லை என ரூபி தேவி என்ற பெண் கூறினார்.
காவல்துறை தங்களது பணிகளைச் செய்தனர். ஆனால் கூட்டம் மிக அதிகமாக இருந்தது என மற்றொரு நபர் கூறினார்.
“நாங்கள் நடைமேடை எண் 13 இல் இருந்தோம். எல்லோரும் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டிருந்தார்கள். எங்கள் கண் முன்னே பலர் விழுந்தனர். அங்கு பரபரப்பான சூழல் நிலவியது”, என்று இந்த விபத்தை நேரில் பார்த்த காஜல் என்ற பெண் கூறினார்.
“பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் மகத் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களில் பயணிக்க பல பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் செல்லவேண்டிய இடத்துக்கு இதுதான் கடைசி ரயில் என்று எல்லோரும் நினைத்ததால் அதில் உறுதியாக ஏறி பயணிக்க வேண்டும் என்று அவர்கள் கருதினர்”, என்று ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் திலீப் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
உயிரழந்தவர்களின் குடும்பத்தினர் கூறுவதென்ன?
இந்த சம்பவத்தில் டெல்லியில் உள்ள கிராரியில் வசிக்கும் உமேஷ் கிரி, தனது 45 வயது மனைவி ஷீலம் தேவியை இழந்துள்ளார்.
“நாங்கள் மகா கும்பமேளாவுக்கு செல்ல இருந்தோம். பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் நடைமேடை என 14-இல் வந்தது. நான் ஏசி கோச்சில் பயணிக்க பயணச்சீட்டு எடுத்து இருந்தேன். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் ஏற்பட்டது. எனது கண் முன்னே, பலர் கீழே விழுந்து கிடந்தனர். ஆனால் மக்கள் அவர்களை மிதித்து அவர்கள் மீதே ஏறி நடந்து சென்றனர்.”, என்கிறார் உமேஷ்.
மேலும் அவர் பேசுகையில், “எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. தாமதமாகவே உதவி கிடைத்தது. நான் காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தேன், ஆனால் யாரும் இதை கேட்க தயாராக இல்லை”, என்றார்.
டெல்லியின் சுல்தான்புரியில் வசிக்கும் ஷோபா, பிகாரைச் சேர்ந்தவர். இந்த சம்பவத்தில் அவர் தனது உறவினர் ஒருவரை இழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் நிலைமை குறித்து ஷோபா கூறுகையில், “மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளும் காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளது. அங்கே ஏராளமானவர்கள் இருப்பதை நான் பார்த்தேன். ஒரே படுக்கையில் நான்கு பேர் படுத்திருக்கிறார்கள். எனது உறவினர் ஒருவர் இருக்கும் படுக்கையில் மூன்று பேர் இருக்கிறார்கள்”. என்றார்.
கும்பமேளாவுக்கு குடும்பத்துடன் புறப்பட இருந்த சஞ்சய், இந்த சம்பவத்தில் தனது சகோதரியை இழந்துவிட்டார்.
“பிரயாக் எக்ஸ்பிரஸில் நாங்கள் 12 பேர் கும்பமேளாவுக்கு செல்ல இருந்தோம். ஆனால் எங்களால் நடைமேடையை கூட அடைய முடியவில்லை. மிகப்பெரிய கூட்டம் ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் மக்கள் எங்களை நசுங்கினர். எனது தம்பியின் மனைவியும், எனது மகளும் அதில் சிக்கிக்கொண்டனர், நாங்கள் அவர்களை மீட்டுவிட்டோம். ஆனால் அரை மணி நேரம் கழித்து என் சகோதரியைக் கண்டேன். அதற்குள் அவர் இறந்துவிட்டார். நாங்கள் அவருக்கு ஒரு மணி நேரம் CPR கொடுத்தோம், ஆனாலும் பலனில்லை. யாரும் எங்களுக்கு உதவ வரவில்லை”, என்று சஞ்சய் தெரிவித்தார்.
ரயில்வே அமைச்சர் என்ன சொன்னார்?
“புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பற்றிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் உதவி செய்யப்பட்டு வருகிறது”, என்று ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
“ரயில்வே நடைமேடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிர் இழந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”, என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அது போலவே, உள்துறை அமைச்சர் அமித் ஷா, “புது டெல்லி ரயில் நிலையத்தில் நடந்த விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினேன். டெல்லியின் துணைநிலை ஆளுநர் மற்றும் டெல்லி காவல்துறை ஆணையரிடம் பேசி, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்”, என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
துணை நிலை ஆளுநர் சொன்னதென்ன?
டெல்லியின் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, “புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ஒரு துயரமான விபத்து நடைபெற்றுள்ளது”, என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
“நான் டெல்லி காவல்துறை ஆணையரிடம் பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். மேலும் மீட்புப் பணியாளர்களை அனுப்புமாறும் தலைமைச் செயலாளரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்தவொரு அவசரநிலை ஏற்பட்டாலும், அதனை கையாள மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர், மேலும் இந்த விபத்து குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
“புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான உண்மையை மறைக்க நரேந்திர மோதி அரசு முயற்சி மிகவும் வெட்கக்கேடானது மற்றும் கண்டிக்கத்தக்கது”, என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
“எங்கள் கோரிக்கை என்னவென்றால், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை விரைவில் அரசு அறிவிக்க வேண்டும். மேலும் காணாமல் போனவர்களையும் கண்டறிவதை உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும், காயமடைந்ததாகவும் குறித்த செய்திகள் மிகவும் வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இந்த சம்பவம் ரயில்வே துறையின் தோல்வியையும், அரசாங்கத்தின் உணர்ச்சியற்ற நிலையையும், எடுத்துக்காட்டுகிறது. பிரயாக்ராஜுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் செல்வதைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையத்தில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒழுங்கற்ற நிர்வாகம் மற்றும் அலட்சியத்தால் யாரும் உயிரிழக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்”, என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பகிரவும்: