மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிப்ரவரி 24 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியதாவது: வழக்கமான அரசியல் வியூகங்களுக்கு அப்பாற்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிடும் தனி பாணியை கையாண்டார் மறைந்த ஜெயலலிதா.
வளர்பிறை அஷ்டமி, பஞ்சமி திதி நாளில், வேட்பாளர் அறிவிப்பை வெளியிடுவது வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அந்நாளை பின்பற்றி வந்தார் ஜெயலலிதா. அது பல தேர்தல்களில் அவருக்கு கைகொடுத்துள்ளது.
அவருடைய பாணியில் தற்போது, ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்., 24யில், முதல் கட்டமாக 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை வெளியிட முடிவெடுத்துள்ளார் பழனிசாமி.
இந்த பட்டியலில் அனைத்து ஜாதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெறுவர். ஒரு பெண்ணுக்கும் அதில் இடம் கிடைக்கும். சில நாட்களுக்கு முன்பாகவே பட்டியலை தயார் செய்துவிட்ட பழனிசாமி, திருப்பதி சென்று பெருமாளை தரிசித்தபோது, பெருமாள் திருவடியில் வைத்து தரச் சொல்லி, அதை பெற்று திரும்பி இருக்கிறார்.
வரும் பிப்., 24, ஜெ., பிறந்த நாள் மட்டுமல்ல; வளர்பிறை அஷ்டமி நாளும் கூட. அதன்காரணமாகவே, அந்த நாளை தேர்வு செய்திருக்கும் பழனிசாமி, தேர்தல் தொடர்பாக, முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார். இவ்வாறு அவர் கூறினர்.