சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், விருதுநகர் பாதிரியார் ஜோசப் ராஜாவுக்கு போக்சோ நீதிமன்றம் விதித்த வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உறுதி செய்தது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜா, பாதிரியார். இவரது சர்ச்சுக்கு சிறுமி, அவரது தாய் அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது ஒரு நாள், சிறுமியை ஜோசப் ராஜாவின் பாதுகாப்பில் விட்டு தாய் வெளியில் சென்றார்.
தாய் திரும்பிய போது, ஜோசப் ராஜா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாற்றுத்திறனாளியான அந்த சிறுமி கூறினார். இதையடுத்து, அந்த பாதிரியார் மற்றும் அவரது குடும்பத்தினர், அந்த தாயிடம் மன்னிப்பு கேட்டனர்.
அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, போக்சோ சட்டப்பிரிவில் போலீசார் வழக்கு பதிந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. ஜோசப் ராஜாவிற்கு ஆயுள் தண்டனை, அதாவது வாழ்நாள் முழுதும் சி றை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, 2023 ஏப்., 20ல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஜோசப் ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை, நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பாலியல் குற்றங்களை புகார் செய்வது எளிது அல்ல. சம்பவம் நடந்ததிலிருந்து புகார் அளிக்க, எட்டு நாட்கள் தாமதம் என்ற மனுதாரர் வாதம், முற்றிலும் ஏற்புடையதல்ல என இந்த நீதிமன்றம் கருதுகிறது.
எனவே , கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு உத்தரவிட்டனர்.