Home செய்திகள்இலங்கைகாதி நீதிபதி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதி நீதிபதி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

by Amizhthu

மட்டக்களப்பு – வாழைச்சேனை, கோரளைப்பற்று மற்றும் பொலன்னறுவை காதி நீதிமன்றங்களின் காதி நீதிபதி ஒருவர் 5,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்று செவ்வாய்க்கிழமை(17-02-2026) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் பற்றி தெரியவருகையில், முறைப்பாட்டாளரின் மனைவி, பிள்ளைகளுக்கான பராமரிப்பு கொடுப்பனவு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, பராமரிப்பு கொடுப்பனவைச் செலுத்தத் தவறியமைக்காக, முறைப்பாட்டாளருக்கு எதிராக நீதிவான் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த பிடியாணையை இரத்துச் செய்வதற்காக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பராமரிப்பு வழக்கு தொடர்பான விபர அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக நீதிபதியான சந்தேகநபர் 5,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த நபர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய, வாழைச்சேனை 05, அக்பர் பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள காதி நீதிமன்ற அலுவலகத்தில், குறித்த நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, அவரை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.

You may also like

Leave a Reply