வங்கி மோசடி: உரிய அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று தொழிலதிபர் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

by Amizhthu

உரிய அனுமதியில்லாமல் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன் என வங்கி மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள தொழிலதிபர் அனில் அம்பானி உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டு வரை, எஸ்.பி.ஐ., உட்பட பல்வேறு வங்கிகளில் சுமார் 31,580 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி, அதை தவறான வழிகளில் முதலீடு செய்ததுடன் திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபர் அனில் அம்பானி மீது புகார் எழுந்தது. இதையடுத்து அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் குழுமத்தின் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

கடந்த 4ம் தேதி, இது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது, அனில் அம்பானி தொடர்பான வழக்கை விசாரிப்பதில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை தாமதம் செய்வதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இத்தகைய புகார்களில் சிக்கக்கூடிய தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை சுட்டிக்காட்டி அனில் அம்பானி நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தில் அனில் அம்பானி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துஉள்ளார். அதில், விசாரணை தொடங்கியதில் இருந்து இப்போது வரை நான் வெளிநாடு செல்லவில்லை என்றும் ஏதேனும் அவசர தேவை காரணமாக வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் உரிய முன் அனுமதியை நீதிமன்றத்தை நாடி பெறுவேன் என்றும் உறுதி அளித்து உள்ளார்.

You may also like

Leave a Reply