மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பகுதியில் நீர்நிலை ஒன்றில் படகொன்றின் உதவியுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்நிலையில் சனிக்கிழமை (28) காலை மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. படகொன்றின் உதவியுடன் இரு சிறுவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகப் படகு கவிழ்ந்து விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்தச் சந்தர்ப்பத்தின்போது, குறித்த நீர்நிலையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார். பதவிகம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். இதேவேளை, குறித்த இளைஞர்களைக் கண்டறியப் பொலிஸார், கடற்படை மற்றும் முப்படையினரின் சுழியோடிப் பிரிவினரின் உதவியுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.