தமிழகத்தில் 8.27 லட்சம் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் 26 ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ — மாணவியருக்கு, ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், 7,545 பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும், 7 லட்சத்து 99,692 மாணவ — மாணவியர்; 27,783 தனித்தேர்வுகள் மற்றும், 281 சிறை கைதி கள் என, 8 லட்சத்து 27,475 பேர், இன்று முதல் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர்.

இவர்களுக்கு, 3,412 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களில், 7,465 மாற்றுத்திறனாளி மாணவர்கள், உதவியாளர் உதவியுடன் தேர்வெழுதுகின்றனர்.

தேர்வு அறைகளில், மாணவர்களை கண்காணிக்க, 44,624 ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்களாகவும், ‘காப்பி’ அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, 4,540 பேர் பறக்கும் படை பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மாவட்ட கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகள், முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் தலைமையில், சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மாணவர்கள், முறைகேடுகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மாணவர்களுக்கு, மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை, 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 94983 83075, 94983 83076 என்ற மொபைல் எண்களிலும் தெரிவிக்கலாம் என, அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

Related posts

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அகவை 50 (05.05.1976 – 05.05.2026)

சென்னை வானிலை அறிக்கை: 7 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு.

தமிழ்நாட்டில் இருண்ட ஆட்சியை அகற்ற இந்தியப் பிரதமர் மோடி வந்துள்ளார்!