சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, புதிதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப் போவதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, நாடு முழுதும் இருந்து இருமுடி கட்டி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சபரிமலையில், சுவாமி அய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்து தவக்கோலத்தில் அமர்ந்திருப்பதால், 10 வயதுக்குட்பட்ட சிறுமியரும், 50 வயதான பெண்களும் இருமுடி சுமந்து சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018ல், அதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
அப்போது ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த முயன்றது. இதனால், அய்யப்ப பக்தர்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
பக்தர்களின் போராட்டத்தை மீறி, போலீசார் பாதுகாப்புடன் இரு பெண்களை சபரிமலைக்கு அழைத்து சென்றபோது, தந்திரி கண்டரரு ராஜீவரரு சன்னிதான கதவை அடைத்து, கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், தங்கம் மாயமான விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு புதிய தலைவராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், உச்ச நீதிமன்றம் வழங்கிய மார்ச் 14 காலக்கெடுவுக்குள், தேவஸ்தானத்தின் நிலைப்பாடு தொடர்பாக, புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.
இது குறித்து திருவனந்தபுரத்தில் நேற்று அவர் கூறியதாவது:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடிவு எடுத்துள்ளோம். சபரிமலையில் பழைய நடைமுறையே தொடர வேண்டும். இது தான் தேவஸ்வம் போர்டின் வலுவான நிலைப்பாடு. இதில் எந்த மாற்றமும் இல்லை. – இவ்வாறு அவர் கூறினார்.
