டித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு தரப்பினடமிருந்து மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் நிவாரண கொடுப்பனவு மற்றும் இழப்பீட்டுத் தொகையை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04-03-2026) நடைபெற்ற அமர்வில் பிரதமருடனான கேள்வி வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
டித்வா புயல்தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடர்களால் நாடளாவிய ரீதியில் 24 இலட்சத்து 87114 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2026.01.15 ஆம் திகதியளவில் 4 இலட்சத்து 26963 பேருக்கு 25 ஆயிரம் ரூபா முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 1 இலட்சத்து 44377 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தால் 6088 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில், 210 வீட்டு பயனாளர்களுக்கு ஆரம்பக்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 1 இலட்சத்து 18889 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில் 2992 வீட்டு பயனாளர்களுக்கு முதற்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களால் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 25 ரூபா கொடுப்பனவு 98.07 சதவீதமானோருக்கும், 50 ஆயிரம் ரூபா 86 சதவீதமானோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மிகுதியாகவுள்ள தரப்பினருக்குரிய நிதி மாவட்ட செயலகம் ஊடாக பிரதேச செயலக பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு தரப்பினடமிருந்து மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் நிவாரண கொடுப்பனவு மற்றும் இழப்பீட்டுத் தொகையை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது.
அனர்த்தங்களால் 2 இலட்சத்து 07312 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கமைய ஒரு மாணவருக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக 15 ஆயிரம் ரூபாவும், ஜனாதிபதி நிதியம் ஊடாக 10 ஆயிரம் ரூபாவும் என்ற அடிப்படையில் 25 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது என்றார்.
