மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்தின் எதிரொலியாக இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பாதிப்பை எதிர்நோக்கி வருவதுடன், தேயிலைக் கொழுந்துகளுக்கான விலையிலும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பில் தேசிய தேயிலை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே தெரிவிக்கையில்,
இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தியில் சுமார் 52 சதவீதமானவை மத்திய கிழக்கு மற்றும் தென்னாபிரிக்க நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாட்டில் மொத்த வருடாந்த தேயிலை உற்பத்தி 256,000 மெற்றிக் தொன்களாக இருக்கும் நிலையில், அதில் 128,000 மெற்றிக் தொன் தேயிலை மேற்படி நாடுகளால் கொள்வனவு செய்ய முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தி 65 சதவீதத்தை பங்களிக்கும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இந்த வீழ்ச்சியால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவார்கள் என்றார்.
பெருந்தோட்ட மற்றும் உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் கே.வி.சமந்த வித்யாரத்ன நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
உலகளாவிய சந்தை மாற்றங்களின் தாக்கம் காரணமாக இலங்கையின் தேயிலை சந்தையில் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய போர்ச் சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 128,000 மெற்றிக் தொன் முடிவுற்ற தேயிலை ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்தின் நிர்வாகத் தவறாக அல்லாமல் உலகளவில் தற்செயலாக உருவான சூழ்நிலையின் விளைவாகும். எனவே பெருந்தோட்ட விவசாயிகள், நடுத்தர அளவிலான விவசாயிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் தேயிலை உற்பத்தியை குறைக்க வேண்டாம்.
மேலும், தற்போது உற்பத்தி செய்யப்படும் தேயிலையை உடனடியாக சந்தைப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் அவற்றைச் சேமித்து வைக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சந்தை நிலைமை சீரடையும் போது அவற்றை சிறந்த விலையில் விற்பனை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டு என்றார்.