“சீமைக்கருவேல் மரங்களை அகற்ற தமிழக அரசு பல ஆண்டுகளாக ஒரு குழுவை அமைத்தும், அதில் கவனம் செலுத்தப்படவில்லை” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
சீமைக்கருவேல மரங்களை அகற்ற, வைகோ, 2015ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செ ய்த பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தார். நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அமர்வு நேற் று விசாரித்தது.
வைகோ ஆஜராகி வாதிட்டதாவது: மெக்சிகோ, தென் அமெரிக்காவிலிருந்து சீமைக்கருவேல மர விதைகளை கொண்டு வந்து, 1960ல் தமிழகத்தில் துாவினர். அப்போது, அதன் ஆபத்தை தமிழகம் புரிந்து கொள்ளவில்லை. இந்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பின், என் தலைமையில் ஒன்பது மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. கேரளாவில் இம்மரங்கள் இல்லை.
கிராம ஊராட்சி, தாலுகா, மாவட்டம், மாநில அளவில் குழு அமைத்து இம்மரங்களை அகற்ற வேண்டும். இதை கண்காணிக்க தனி செயலி உருவாக்க வேண்டும். இப்பணியில் அரசின் அனைத்து துறைகள் மற்றும் ரயில்வே துறையை ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு வாதாடினார்.
வனத்துறை சார்பில் ஆ ஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன்: இம்மரங்களை அகற்றுவதில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபடுத்தப்படும். பொது நிலங்களில் இம்மரங்களை அகற்றுவதில் சிரமம் இல்லை. தனியார் நிலங்களில், பட்டாதாரர்களிடமிருந்து அனுமதி பெற்ற பிறகே அகற்றும் பணியை மேற்கொள்ள முடியும்.
மத்திய அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள இம்மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார். நீதிபதிகள், ‘பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்றனர். விசாரணை முடிந்த பின் வைகோ அளித்த பேட்டி:
சீமைக்கருவேல மரங்களை அகற்ற, தமிழக அரசு குழு அமைத்து பல ஆண்டுகளானாலும், அதில் கவனம் செலுத்தவில்லை. குழு அமைத்தும் நடவடிக்கை இல்லை. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கேடாக உள்ள இம்மரங்களை அகற்ற, தமிழக அரசு செயல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.