”ஆந்திராவில், 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும்,” என, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இளம் வயதினரை பாதுகாக்க அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதே போல், கர்நாடகாவிலும், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாடு உட்பட உலகளவில், குழந்தைகளிடையே மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. 3 – 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மொபைல் போனில், ‘கேம்’ விளையாடுகின்றனர். சமூக ஊடகங்களான, ‘யூ டியூப், இன்ஸ்டாகிராம்’ ஆகியவற்றில், ‘ரீல்ஸ்’ எனப்படும் குறும்பட வீடியோக்களை பார்க்கின்றனர்.
இதில் ஒருசில குழந்தைகள், பெற்றோருக்கு தெரியாமலேயே அவர்களின் மொபைல் போனை எடுத்து, ‘அன் லாக்’ செய்து பயன்படுத்து கின்றனர். ‘மொபைல் போனில் வீடியோ பார்த்தால் தான் சாப்பிடுவேன்’ என்றும் சிலர் அடம் பிடிக்கின்றனர்.
அந்தளவுக்கு சிறு வயதிலேயே மொபைல் போனுக்கு அடிமையாகி விடுகின்றனர். இதை கருதியே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை, நம் நாட்டிலும் அமல்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
அதற்கு அச்சாரம் போடும் வகையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் ஆந்திராவில், 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்க உள்ளது.
இது குறித்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கூறியதாவது:
ஆந்திராவில், 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும். இது தொடர்பான கொள்கை, அடுத்த 90 நாட்களில் படிப்படியாக அமல்படுத்தப்படும். இந்த தடையை, 13 – 16 வயது வரையிலான சிறார்களுக்கும் நீட்டிக்கலாமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
உரிய ஆலோசனை மற்றும் கொள்கை ஆய்வுகளுக்கு பின், கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறார்களிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாட்டால் ஏற்படும் மோசமா ன விளைவுகளை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டிலேயே முதலிரண்டு மாநிலங்களாக, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில், சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன் படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. இதை பின்பற்றி தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.