இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர்களினால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் (தொழிலாளர் ஊதியம்) கடந்த பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர் வருமானம் 548.1 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்டது. இதனுடன் ஒப்பிடுகையில், 2026 பெப்ரவரி மாத வருமானம் 180.9 மில்லியன் டொலர்களினால் (சுமார் 33 சதவீதம்) அதிகரித்துள்ளது.
நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில் 751.1 மில்லியன் டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளது. அதனுடன் ஒப்பிடும்போது பெப்ரவரி மாதத்தில் வருமானத்தில் சிறிய வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், ஒட்டுமொத்த வளர்ச்சி திருப்திகரமாக உள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் (ஜனவரி மற்றும் பெப்ரவரி) வெளிநாட்டுத் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்ட மொத்தப் பணம் 1.48 பில்லியன் டொலர்களாகும். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 32 சதவீத வளர்ச்சியாகும்.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழலில், அந்நியச் செலாவணி கையிருப்பை உறுதிப்படுத்துவதில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.